புதிய அரசியலமைப்பை திருத்தத்தை எதிர்ப்போம் என்ற பொதுபல சேனாவின் நிலைப்பாட்டை உலமா கட்சி வரவேற்றுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
இந்நாட்டு முஸ்லிம்கள் இந்த நல்லாட்சி அரசை கொண்டு வந்தது அரசியல் யாப்பை மாற்ற வேண்டும் என்றோ, தொகுதிவாரி தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும் என்றோ, முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றோ அல்ல. மாறாக மஹிந்த அரசில் ஹெல உறுமயவின் ஆதரவில் இயங்கிய பொது பல சேனா போன்ற இனவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அவர்களை தடைசெய்து நாட்டில் சகல மக்களுக்குமிடையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
இதற்காக முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட எட்டு லட்சத்துக்கு மேல் மைத்ரி, ரணில் அரசுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இதே முஸ்லிம்களின் நான்கு இலட்ச வாக்குகளாவது மஹிந்தவுக்கு அளிக்கப்பட்டிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருப்பார். ஆனால் இன்றைய அரசு தனக்கு ஏன் முஸ்லிம்கள் வாக்களித்தனர் என்பதை மறந்து முஸ்லிம்களை துன்புறுத்தும் திட்டங்களைத்தான் நாள்தோறும் சிந்திக்கிறது. இந்த வகையில்தான் புதிய அரசியல் யாப்பு, மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரம் போன்றவையாகும்.
புதிய அரசியல் திருத்தம் என்பது தற்போதைக்கு அவசியமற்றது என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அந்த வகையில் இதே கருத்தை பொது பல சேனாவின் செயலாளர் ஞான சார தேரர் கூறியிருப்பதை உலமா கட்சி வரவேற்கிறது. அவர் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக இஸ்ரேல், அமெரிக்கா, நோர்வே, டயஸ் போராக்கள், மற்றும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள தமிழை கொச்சையாக பேசும் சில புல்லுருவிகளின் பேச்சுக்களை அரைகுறையாக விளங்கியதன் காரணமாக முஸ்லிம் சமூகம் பற்றி பிழையாக இனவாதமாக பேசுவதன் காரணமாகவே நாம் அவரை எதிர்க்கின்றோம். ஆனாலும் அரசியல் யாப்பு திருத்தம் தேவையற்றது, நாட்டை சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்லாட்சி அரசு விற்க முணைவதை கண்டிப்பது போன்ற அவரது கருத்துக்களை நாம் பெரிதும் வரவேற்கிறோம். இந்த நல்ல விடயங்களில் பொதுபல சேனாவுடன் உலமா கட்சி புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என உலமா கட்சித்தலைவர் தெரிவித்தார்.

Post a Comment