ஜம்இய்யத்துல் உலமா சபை பிளவுபடுவதை உலமா கட்சி அனுமதிக்காத அதே வேளை இத்தகைய பிளவுகளுக்கு அதிகார வர்க்கத்துக்கு தலை சாய்க்கும் உலமா சபையின் நிர்வாகமே காரணம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
உலமா சபை பிளவு சம்பந்தமாக கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும்; தெரிவித்ததாவது,
உலமா சபை என்பது அரசியல்வாதிகளுக்கோ பணக்காரர்களுக்;கோ தலை சாய்க்காத ஒன்றாக, நடு நிலையாக இருக்க வேண்டுமென்றே நாம் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். அவ்வாறு அரசியலில் கலக்க விரும்பினால் உலமா கட்சியுடன் இணைந்து செயற்படும் படி அழைப்பும் விடுத்தோம்.
ஆனால் அண்மைக்காலமாக உலமா சபையின் நிர்வாகமும், அதன் பிராந்திய கிளைகளின் நிர்வாகிகளும் அரசியல்வாதிகளின் அன்புக்கு ஏங்குபவர்களாக இருப்பது கவலைக்குரியதாகும். எம்மைப்பொறுத்தவரை உலமா சபையின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் எந்தவொரு அரசியல்வாதியும் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் அது அரசியலாகட்டும் அரசியல் இல்லாததாகட்டும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்பதை உலமா சபை தனது நிர்வாகத்துக்கு சட்டமாக்க வேண்டும் என்பதை கடந்த காலங்களில் சொல்லி வந்துள்ளோம். அத்தகைய அரசியல்வதிகள் என்போர் ஆளுங்கட்சியை சேர்ந்தோராகவும் இருக்கலாம் எதிர் கட்சியை சேர்ந்தோராகவும் இருக்கலாம். இதனை மீறும் உலமாக்கள் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவற்றிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தக்கோரிக்கையை உலமா சபை ஏற்றிருந்தால் இன்று அதற்குள் இத்தகைய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்காது.
அத்துடன் ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாக தெரிவு என்பதும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அதன் யாப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. தலைவர், செயலாளர் போன்ற தெரிவு என்பது நிர்வாகமே கூடி நிர்வாகத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஆகவே ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாகம் கௌரவமான மார்க்க அமைப்பாக இருப்பதோடு அரசியல்வாதிகளை தேடிச்செல்வோராக இருக்காது அரசியல்வாதிகள் தம்மை வந்து சந்திக்கக்கூடிய வகையில் அரசியல் வாதிகளுக்கு தலைசாய்க்காதவர்களாக இருப்பதுடன் ஜனநாயக ரீதியில் சபையின் யாப்பின் பிரகாரம் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு அதில் நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை விடுத்து உலமா சபை இரண்டாக பிரிவதை எம்மால் ஏற்க முடியாது என்று கூறிவைக்க விரும்புகிறோம்.