BREAKING NEWS

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி நீக்கம்; மனைவிக்கும் 7 நாள் தடுப்புக்காவல்


போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவியையும்
நீதிமன்றில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் அனுமதி பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போதைப் பொருள் வாங்கியமைக்காக வழங்கப்பட்ட பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவியே எடுத்து வைத்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிந்து எடுத்து வைத்தாரா அல்லது தெரியாமல் எடுத்து வைத்தாரா என்பன தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனது வீட்டின் அலுமாரியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டவை போதைப் பொருள் அல்ல, ஒரு வகை மூலிகை என்றும் தனது சேவைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை களின் போது மீட்டெடுக்கப்பட்டவை என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது சேவைக்காலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் தொகை தொடர்பிலும் விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar