அபிவிருத்தி எமக்கத்தேவையில்லை, உரிமையே தேவை என தேர்தல் காலங்களில் முழக்கமிட்ட ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரசினர் இப்போது அபிவிருத்தி கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை என ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக உள்ளது என அ. இ. முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சமூகங்களின் உரிமைகள் என்பதற்குள் அபிவிருத்தியும் அடங்குகின்றன என்பதை கருத்திற்கொண்டே நாம் இந்த அரசாங்கத்தை ஆரம்ப முதல் ஆதரித்து வருகின்றோம். இதனை கொச்சைப்படுத்திய ஸ்ரீ. மு. கா, அபிவிருத்திகள் எமக்கு முக்கியமல்ல உரிமைகளே முக்கியம் என்றும் அரசுக்கு ஆதரவான கட்சிகளின் அபிவிருத்தி வார்த்தைகளுக்கு மக்கள் மயங்க வேண்டாம் என்றும் மக்களிடம் கூறி அவர்களை பிழையாக வழிநடாத்தினர்.
ஆனால் இன்று அதே மு. காவினர் அரசாங்கத்தின் அபிவிருத்திகளை பெற்று தமது கமிசன்களை பெற்றுக்கொள்ள முடியாதா என ஏங்குவதையும், தாம் அபிவிருத்திக்கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லையே என ஊடகங்களில் ஒப்பாரி வைப்பதையும் காண்கிறோம். அத்துடன் தமது கட்சித்தலைவரான அமைச்சரின் ஊடாக அரசாங்கத்திடம் அபிவிருத்திக்கான கோரிக்கைகளை முன்வைக்காது சாதாரண ஒரு மாவட்ட கூட்டத்தில் முன்வைத்து அவை நிராகரிக்கப்பட்டு விட்டதாக ஒப்பாரி வைப்பதையும் காணும் போது இவர்களின் நோக்கம் எந்த வகையிலாவது அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசை திருப்ப முனைவதாகவே தெரிகிறது.
ஆகவே உரிமைகள் வேறு அபிவிருத்திகள் வேறு என்பதல்ல மாறாக அபிவிருத்தியும் நமது உரிமைதான் என்ற தெளிவான எமது அரசியல் சிந்தனையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.