ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்ற மத்திய குழு உறுப்பினர் ஏ எல் மர்ஜான் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இப்படியான அடாவடி அரசியலை வளர்த்து விட்டதற்கான பொறுப்பை முஸ்லிம் காங்கிரசே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இது சம்பந்தமாக அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக பதிவு பெறுமுன் இருந்த அரசியல்வாதிகள்; காடையர்களையே தமது சகாக்களாக வைத்துக்கொண்டு அரசியல் செய்தனர். இத்தகைய அடாவடி அரசியல் நீக்கப்பட்டு நீதியம், நியாயமும் மிக்க அரசியல்வாதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றே முஸ்லிம் காங்கிரஸ் உருவானது.
பின்னர் கால ஓட்டத்தில் மு. காவும் சராசரி அடாவடித்தன அரசியலையே முன்னெடுத்தது. கருத்துச்சுதந்திரத்தை மதிக்காமை, கூப்போடுதல், கல்லெறிதல், காடையர்களை ஏவிவிட்டு அச்சுறுத்தல் போன்ற அனைத்து இஸ்லாமிய விரோத அரசியலையும் முஸ்லிம் காங்கிரசும் முன்னெடுத்தது.
இந்தக்குட்டையில் புடம்போடப்பட்ட அக்கரைப்பற்று அமைச்சரின் ஆட்களும் அதே செயலில் இறங்கியிருப்பதனைத்தான் இன்று காண்கிறோம். ஆகவே தேர்தல் எனும் போது கருத்துக்களை கருத்துக்களே மோத வேண்டுமே தவிர தனி மனிதர்கள் மீது காடைத்தனத்தை அவிழ்த்துவிடும் அராஜக அரசியலை எவர் செய்தாலும் அதனை கண்டிக்க வேண்டியது இஸ்லாமிய அரசியலை போதிக்கும் உலமா கட்சியின் கடமையாகும்.
அந்த வகையில் அக்கரைப்பற்று மர்ஜான் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.