13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென அரச தரப்பை சேர்ந்த சிலர் கோருவதன் மூலம் அவர்கள் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள் என அகில இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
13வது திருச்சட்டம் மூலம் பற்றி கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழமே புலிகளினால் முன் வைக்கப்பட்ட போது இந்தியாவின் தலையீடு காரணமாக ஓரளவு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் தீர்வாக 13 வது திருத்தச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் இச்சட்ட மூலத்தின் பிரதிபலனான மகாண சபை முறையை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதையும் மறுத்தார். இதன் காரணமாக 88ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் துப்பாக்கிகளுக்கு மன்பாகவே நடத்தப்பட்டது.
இவ்வாறு இந்தியாவின் அணுசரனையுடன் கொண்டு வந்த மகாண சபையை உருவாக்குவதற்காக இந்தியா தனது ஆயிரக்கணக்கான அனுமதிப் படைகளை இலங்கையில் இழந்தது. இப் பெரிய இழப்பின் மூலம் உருவான மகாண சபைகளுக்கான 13வது சட்டத்தை நீக்க வேண்டுமென அரச தரப்பு அமைச்சர்கள் சிலர் இப்போது கூறுவது மாகாண சபைகள் வேண்டாம் என்ற பிரபாகரனின் அன்றைய கூற்றை இவர்கள் இன்று சரி காண்பதாக தெரிகிறது.
மாகாண சபை முறை தேவையில்லை என்று அதனை மறுத்த பிரபாகரனை எதிர்;த்த இந்தியாவும் இலங்கை அரசும் இன்று அது தேவையில்லை என கூறும் அரச தரப்பினருக்கெதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காதிருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
ஆக 13வது திருத்தச்சட்டத்தை நீக்க கோருவதன் மூலம் பிரபாகரனின் கொள்கை தான் சரியானது என்று அரச தரப்பினர் கூற விளைகிறார்களா என்று கேட்க விரும்புகிறோம் என உலமா கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.