BREAKING NEWS

அமைச்சர்களின் தலைமையிலான முஸ்லிம், தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என நினைப்பதும் அழைப்பதும் யதார்த்தமாகாது


தமிழ் பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அடிப்படைக்கொள்கைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்  அவர்களின் கருத்து வரவேற்புக்குரியதாக இருப்பினும் அமைச்சர்களின் தலைமையிலான முஸ்லிம், தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வருவார்கள் என நினைப்பதும் அழைப்பதும் யதார்த்தமாகாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவத்துள்ளதாவது,


நாடு இன்றுள்ள சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று பட வேண்டும் என்ற ஆதங்கம் தமிழ் பேசும் மக்களிடையே அதிகமாக ஏற்பட்டு வருவதை அவதாணிக்க முடிகிறது. கடந்த காலங்களில் விடப்பட்ட பாரிய தவறுகளை திருத்திக்கொள்வதன் மூலம் இதற்கான பாதைகளை திறந்து விட முடியும். ஆனாலும் அரச அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் இணைத்து  அடிப்படைக்கொள்கை ஒன்றை உருவாக்க முடியும் என்பது சாத்தியமான ஒன்றாக தெரியவில்லை. காரணம் பதவிகளுக்காகவே கட்சி என்ற அடிப்படையில் இருக்கும் கட்சிகள் மக்களுக்காக கட்சிகள் என்ற அடிப்படைக்கு முரண்பட்டவையாகும். இவ்வாறு அடிப்படையிலேயே முரண்படும் கட்சிகளை இணைத்து இன்னொரு அடிப்படைக்கொள்கை ஒன்றை உருவாக்க முடியாது.

இந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் அமைச்சர்களின் தலைமைகளின் கீழ் இல்லாமல் தனித்துவமாக இயங்கும் கட்சிகளை அவை சிறிய கட்சிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படாமல் சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் கட்சிகள் என்ற பார்வையில் அவைகளுடன் பேசு;சு வார்த்தைகளில் ஈடு பட தமிழ் தரப்பு முன்வர வேண்டுமென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கடிதம் மூலம் வேண்டியிருந்தோம். ஆனால் எமது இக்கருத்தை கணக்கில் எடுக்காத தமிழ் கூட்டமைப்பு வாக்கு வங்கி பெரிதாக உள்ளதே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பெரிதும் நம்பினார்கள். கடைசியல் நடந்தவை என்ன என்பது சகலருக்கும் தெரியும். மக்கள் வாக்குள்ள கட்சியாக இருப்பினும் அமைச்சுப்பதவிகளுக்காய ஆலாய் பறக்கும் கட்சி அது என்பதை தமிழ் கூட்டமைப்பினர் உணர மறந்து ஏமாந்து விட்டனர். 

ஆகவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாட்டில் உள்ள சிறிய கட்சிகளை தம்மோடு இணைத்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் முன் வரவேண்டும். அவ்வாறானதோர் செயற்பாட்டை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகமும் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியும் என்பதோடு முஸ்லிம் சிறு கட்சிகளுக்கு தமிழ் கூட்டமைப்பு வழங்கும் முக்கியத்துவத்தை பொறுத்து முஸ்லிம் சமூகம் தமிழ் கூட்டமைப்பு பற்றிய நல்லதொரு புரிந்துணர்வுக்கு வர வழி வகுப்பதோடு எதிர் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இத்தகைய அணியில் இணைய தாமாகவே முன்வரலாம். இத்தகைய முன்னெடுப்புக்கான பந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கமே உள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar