BREAKING NEWS

மின்சார கட்டண உயர்வு இல்லை. எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி


60 அலகுகளுக்குள் மின்சார கட்டண உயர்வு இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் மின்சார கட்டணங்களை உயர்த்தி ஏழைகளின் தலையில் மண்ணையும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு பொன்னையும் வழங்கவிருந்த வேளை இது பற்றி ஐ. தே.க, மற்றும் ஜே வி பி போன்ற எதிர்க்கட்சிகள் பாரிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்பின. கடைசியல் மின்சார கட்டண உயர்வு இந்த அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு போய் விடுமென அச்சப்பட்ட அரசாங்கம் இப்போது கட்டண உயர்வை குறைத்துள்ளது.
இதன் மூலம் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிப்பேசாத நமது மௌன வீரர்களான பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் சிறந்த பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் ஆயதங்களால் சாதிக்க முடியாதவற்றை ஜனநாயக அரசியல் மூலம் சாதிக்க முடியும் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னமும் சரிவர புரிந்து கொள்ளவில்லை.  முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என கேட்போருக்கும் மின்சாரம் நல்ல பதிலை அளித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் சார்பு எதிர்க்கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஹலாலையும் பல பள்ளிவாயல்களையும் காப்பாற்றியிருக்க முடியும். நமது பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தி குரல் எழுப்ப வேண்டும் என்பதையே ஜனநாயகம் கற்றுத்தருகின்றது. அதன் மூலம் உடனடி வெற்றி கிடைக்காவிட்டாலும் பொறுமையாக தொடர்ந்தும் பேசுவதன் மூலம் வெற்றிகளை அடைய முடியும். பொறுமை என்பது பேசாமல் மௌனமாக இருப்பதாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பொறுமை என்பது வன்முறையை நாடாமல் ஜனநாயக ரீதியல் நமது கருத்துக்களை தொடராக முன்வைப்பதாகும்.
மின்சார கட்டனங்களை ஒரு எல்லைக்கு மேல் உயர்த்துவதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வருவதற்காக போராடிய அனைத்து கட்சிகளுக்கும் முஸ்லிம் மக்கள் கட்சி தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar