BREAKING NEWS

இன்றைய முஸ்லிம் முரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை

கூட்டுத்; தலைமைத்துவத்துக்கு  வழிகாட்டும் கூட்டுத்தொழுகை
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் கூட்டுத்தொழுகையும் ஒன்று. இத்தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் தலைமைத்துவ வழி காட்டல்களை நாம் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

பொதுவாக தொழுகை என்றவுடன் அது இறைவனுக்காக செய்யும் வணக்கம் என்பதாக மட்டுமே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது மனித வாழ்வின் பிரதானமான அரசியல் வழி காட்டல் மற்றும் தலைமைத்துவ கட்டுக்கோப்பு, எந்த விடயங்களில் தலைமைகளுக்கு கட்டுப்பட வேண்டும், எவ்வாறு கட்டடுப்பட வேண்டும், ஒரு தலைமை இல்லாது போனால் அதற்கடுத்த தலைமை யார், எத்தகையவர்கள் தலைவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற பல படிப்பினைகளை கூட்டுத்தொழுகை நமக்கு காட்டுகிறது.
இது விடயம் பற்றி இது வரை எவரும் சிந்திக்கத்தவறிய இந்தக்கோணத்தை நாம் அனைவரும் சிந்தித்தால் பல உண்மைகளும் வழி காட்டல்களும் நமக்குத் தெளிவாகும்.
கூட்டுத்தொழுகை ஒன்றுக்கு ஆகக்குறைந்தது இருவர் இருந்தால் போதுமானதாகும். இருவர் தனித்து தொழுவதை விட இருவரும் சேர்ந்து ஒருவர் தலைமையில் மற்றவர் தொழ வேண்டுமென்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதன்படி ஒரு முஸ்லிம் எந்தவொரு இஸ்லாம் சார்ந்த அரசியல் அமைப்புடன் இணையாமல் தனியாக வாழக்கூடாது என்பதை நாம்  தெரிந்து கொள்வதுடன் இது விடயத்தில் கூட்டுச்செயற்பாடு அவசியம் என்பதை புரிந்து கொள்கிறோம்.
 கூட்டாக தொழுகை நடக்குமாயின் அதனுடன் இணைந்து தொழ வேண்டுமே தவிர அந்த வேளையில் தனித்து தொழுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதன் மூலம் இஸ்லாமிய அரசியல் தலைமைத்துவம் இருந்தால் அதனுடன் இணைந்து அத்தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிடில் இருவர் சேர்ந்தாவது இஸ்லாமிய அரசியல் தலைமைத்துவத்தை, அமைப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதனோடு மற்றவர்களும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்பதை கூட்டுத்தொழுகை நமக்குச்சொல்கிறது.
தொழுகை நடத்தும் தலைவர் தனக்கு பின்னால் நிற்பவரின் வெறுப்புக்குரியவராக இருக்கக்கூடாது என ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். அதாவது பின்னால் மஃமூமாக நிற்பவர் வெறுக்கும் ஒருவர் இமாமத் செய்யக்கூடாது. இதன் படி இஸ்லாமிய அரசியல் தலைமையை ஏற்றுக்கொண்டவர் தனது தலைமையை விரும்பாத மக்கள் இருந்தால் அவர் தனது தலைமைத்துவத்திலிருந்து நீங்கி விட வேண்டும். மக்கள் வெறுக்கும் நிலையில் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்கிறோம்.
 தொழுகைக்கு இமாமாக- தலைவராக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நபிகளார் மிக எளிதாக சொல்லியுள்;ளார்கள். உங்களில் வயதில் மூத்தவர் அல்லது குர்ஆனை அதிகம் ஓதத்தெரிந்தவர் இமாமத் செய்யட்டும் என கூறியுள்ளார்கள். அதன் மூலம் நமது மனதுக்குப்பிடித்த பலர் இமாமத் செய்ய இருந்தாலும் அவர்களை விட்டு விட்டு வயதில் மூத்த அல்லது குர்ஆனைக்கற்ற ஒருவரையே இமாமாக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்கிறோம்.
       பல பள்ளிவாயல்களில் தொழுகைக்கு தயாராகும் போது மௌலவிமார் அங்கே இருந்தும் ஜுப்பா போட்டவர் அல்லது பெரிய தாடி என்பதற்காக பாமர மகனை  இமாமத் செய்ய அனுமதிக்கப்படுவதை காணலாம். இது நபிவழிக்கு முரணானதாகும். இது போன்றே முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதும் வயதில் முதிர்ந்த அல்லது குர்ஆனைக்கற்றவராக அதாவது ஆலிமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்கிறோம். தொழுபவர் மத்தியில் வயது முதிர்ந்தவர் என்றால் குறைந்தது அறுபது வயதுக்கு மேற்பட்டோர் தொழுகையில் இருந்தால் அந்த வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அந்த இடத்தில் குர்ஆனைக்கற்றவர் இல்லாத சூழ்நிலையில் தொழுவிக்க வேண்டும்.
இதே போல் முஸ்லிம் சமூகத்திலும் குர்ஆனைக்கற்ற எவரும் இல்லாத நிலையில் அல்லது தலைமைத்துவத்தை ஏற்றுச்செயற்பட எவரும் முன் வராத நிலையில் சுமார் அறுபது வயதுக்கு மேற்பட்டவர் தலைவராக செயற்படலாம். இங்கு வயதில் மூத்தவர் என சொல்லப்பட்டதில் நிறைய அர்த்தமுண்டு. தொழுவதில் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கும். அத்தோடு நிதானம், பகக்குவம் என்பவையும் இருக்கும். இன்றைய முஸ்லிம் சமூகத்தில் குர்ஆனைக்கற்ற பலர் இருப்பதால் முதியவர் என்ற பேச்சக்கு இடமில்லை. குர்ஆனைக்கற்ற பலரும் அரசியல் என்றால் ஆளை விடு என்றிருக்கும் போது முன்வந்துள்ள ஒரு சிலரையாவது முன்வைத்து கூட்டாக செயற்படுவது சமூகத்தின் மீது கடமையாகும். அவ்வாறு குர்ஆனைக்கற்றவர் இருக்க பணம், செல்வாக்கு, கட்சி, குடும்பம் என்பவற்றை பார்த்து அவர்களை தலைவர்களாக்குவது இஸ்லாத்துக்கு முரண் என்பதை கூட்டுத்தொழுகைக்குரிய இமாமுக்கான தகுதி நமக்கு கற்றுத்தருகிறது.
தொழுகையை நடத்துபவர் பின்னால் இருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது நபியவர்கள் கட்டளை. அதாவது அளவுக்கதிகமாக தொழுகையை நீட்டுவது, அல்லது குறைப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறே முஸ்லிம்களின் இஸ்லாமிய தலைமைத்துவமும் மக்களுக்கு அலுப்ப+ட்டும் வகையில் மக்களுக்கு சேவை செய்யாமலிருப்பது, பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் பதுங்கியிருப்பது, சமூகத்தை மறந்து தனது சுயநலன் அடிப்படையில் வாழ்வது என்பவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு நாம் பரிந்து கொள்கிறோம்.
இமாமத் செய்பவர் தொழுகையில் ஏதாவது தவறிழைத்தால் சுப்ஹானள்ளாஹ் என குரல் எழுப்பி தலைமைக்கு தவறை உடனடியாக சுட்டிக்காட்ட வேண்டும். தொழுகையிலேயே இமாம் தவறு விட்டால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் என கூறியிருக்க நிஜவாழ்வில் தலைவர் தவறிழைத்தால் கைகட்டி வாய் பொத்தி இருக்க முடியாது. தலைவரை நோக்கி சத்தமாக குரல் எழுப்பி தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை இங்கு நாம் கூட்டுத்தொழுகையின் மூலம் மிக அழகாக தெரிந்து கொள்கிறோம்.
பின்னால் உள்ளவர் இமாமத் செய்பவரை முந்தாமல் தொடர வேண்டும். இமாம் சுஜுதிலிருந்து எழு முன் எழுபவரை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள். அதன்படி இஸ்லாமிய தலைமைத்துவம் ஒரு விடயத்தை செய்யும் போது நாமும் அதை தொடர வேண்டும். தலைவருக்கு முந்தி முந்திரிக்கொட்டை போன்று நாம் செயற்படுவதோ, பேசுவதோ ஊடகங்களுக்கு கருத்துக்கூறுவதோ கூடாது என்பதை புரிந்து கொள்கிறோம்.
இமாமத் செய்பவர் தொழுகையில் தவறிழைத்த போது அதனை பின்னாலிருப்பவர் சுட்டிக்காட்டியும் அதனை திருத்தாமல் தொடர்ந்து இமாம் தொழுதால் பின்னாலிருப்பவர் விரும்பினால் தாமும் தொடரலாம் அல்லது இமாம் தவற விட்டதிலிருந்து மீண்டு வரும் வரை எதிர்பார்க்கலாம். உதாரணமாக ளுஹரில் நான்கு ரக்அத் முடிந்த பின் இன்னொரு ரக்அத்துக்கு இமாம் எழுந்தால் நாம் தவறை சுட்டிக்காட்ட சத்தமிட்டும் அவர் அதனை தொடர்ந்தால் நாமும் அவருடன் இணைந்து அந்த ரக்அத்தை தொழலாம் அல்லது அவர் அதனை முடித்து வரும் வரை இருப்பில் எதிர் பார்த்திருக்கலாம்.
இதன் படி தலைமைத்துவம் பிழை செய்தால் நாம் சுட்டிக்காட்டியும் கேட்காது போனால் நாம் விரும்பினால் அந்தத்தலைமையை தொடரலாம் அல்லது தலைமை திருந்தி வரும் வரை எதிர் பாhத்திருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறோம்.
அதே போல் முன்னால் தொழுகையை நடத்திக்கொண்டிருக்கும் இமாம் திடீரென மரணித்தால் அல்லது அவரது வுழு முறிந்து தொழுவிக்கும் தகுதியை அவர் இழந்தால் உடனே பின்னாலிருக்கும் ஒருவர் அந்த இடத்துக்கு தாமாக சென்று தொழுகையை நடத்த வேண்டும். இதற்கேற்ற வகையில் பின்னால் இருப்பவர்களும் தகுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் அரசியல் அல்லது போராட்ட களத்தில் உள்ள தலைவருக்கு ஏதும் நடந்தால் உடனடியாக பின்னாலிருப்பவர் அந்த இடத்தை தானாக நிரப்ப வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்கிறோம்.
தொழுகையை நடத்துபவர் ஆணாக இருக்க வேண்டும் என்பதால் தலைமைக்கும் ஆண் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். பெண்கள் ஜமாஅத் என்றால் பெண் தலைவராக இருக்கலாம். இதன்படி பெண்களுக்கு மட்டுமான அமைப்பு என்றால் பெண் தலைவியாக இருக்கலாம்.
இவ்வாறு பல விடயங்களை கூட்டுத்தொழுகை நமக்கு கற்றுத்தருகிறது. தொழுகையின் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் கவனமாக சிந்தித்துப்பார்த்தால் இன்னும் பல விளக்கங்கள் நமக்குக் கிடைப்பதை காணலாம்.
ஆக, இஸ்லாத்தின் பெருங்கடமையான கூட்டுத்தொழுகை என்பது முஸ்லிம்களின் இஸ்லாமிய அரசியல் தலைமையின் அவசியத்தையும், அதற்கான வழிகாட்டலையும் செய்வதுடன் இஸ்லாமிய தலைமைத்துவத்துடன் இணையாமல் ஒரு முஸ்லிம் தனித்து வாழக்கூடாது என்பதையும் வழிகாட்டுகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு வழி காட்டிய முஹம்மத் (ஸல்) அவர்களின் சொல், செயல்கள் என்பனவும் இவற்றையே வலியுறுத்துகின்றன.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar