இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீது விதிக்கப்பட்ட தடை , உடனடியாக
நீக்கப்படுவதுடன், இவ்விடயத்தில் அதிகாரம் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்
தலையீடு செய்ய வேண்டுமென முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன்
தெரிவித்துள்ளதாவது,
இலங்கை முஸ்லிம்களிடத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய ஜப்னா முஸ்லிம்
இணையம் மீது இலங்கையில் தடை விதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்டன.
இத்தடை நீக்கப்பட வேண்டுமென முஸ்லிம் மீடியா போரம் சம்பந்தப்பட்டவர்களை
வலியுறுத்தி வந்துள்ளது.சில தரப்புகளுடன் உத்தியோகபூர்வமாகவும்,
உத்தியோகபற்றற்ற முறையிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. எனினும்
துரதிஷ்டவசமாக ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடையை கண்டிக்கவோ அல்லது அத்தடை
நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தவோ முஸ்லிம் அரசியல் சக்திகள் பகிரங்கமாக
முன்வரவில்லை.
முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட வேளைகளில் விரைவாகவும், துணிவாகவும்
ஜப்னா முஸ்லிம் இணையம் செய்திகளை வெளியிட்டது. வெளிநாடுகளில் வாழும் இலங்கை
முஸ்லிம்கள் உடனுக்குடன் தகவல்களை அறிய இது உதவியது. இலங்கை முஸ்லிம்களின்
வரலாற்றில் இதுகாலவரையும் செயற்பட்டுவந்த ஊடகங்களில் ஜப்னா முஸ்லிம்
இணையமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளது.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பங்களிப்பு இன்றைய காலத்தில் அவசியமானதாக முஸ்லிம் மீடியா போரம் கருதுகிறது. இதுவே இலங்கை முஸ்லிம்களினதும் விருப்பமாகும்.
இந்நிலையில் அதிகாரம் பெற்ற சகல தரப்புகளும், இதுவிடயத்தில் நிதானமாக சிந்திப்பது அவசியமாகிறது. முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி ஜப்னா முஸ்லிம் இணையம் மீது, இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சகல தரப்புகளும் முன்வர வேண்டும் என முஸ்லிம் மீடியா போரம் அழைப்பு விடுக்கிறது எனவும் என்.எம்.அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.