விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை அச்சுறுத்தி வருகிறார் என அவரது மனைவி ஆஷா போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் அமைச்சர் அளுத்கமகே மீது சுமத்திய குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் விசேட பிரிவினர் நடாத்திய விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
தனது கணவரான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி அவரது மனைவி கடந்த 21ம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை முறைப்பாடாக அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து பொலிஸ் தலைமையகத்தின் விஷேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்படி, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவோ அல்லது அவரது கட்டளையின் பெயரில் வேறு குழுவினரே நேரடியாகவோ மறைமுகமாகவோ தொலைபேசி அல்லது வேறு விதத்திலோ ஆஷாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.