இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் அதிகமான மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி அங்காடி, பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே, நீலகிரி அங்காடி நிர்வாகத்திடம், இலங்கை பொருட்களை விற்கவேண்டாம். அவை இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது. அதனால், அப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம்' என்று இலங்கை புறக்கணிப்பு குழு பலமுறை கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும், அங்கு தொடர்ந்து இலங்கைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அதனை கண்டிக்கும் வகையிலும் அந்நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் நீலகிரி அங்காடியின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் 60க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள், நீலகிரி நிர்வாகத்திடம் உடனடியாக இலங்கை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் அதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கடைகளையும் புறக்கணிப்போம் என்று எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து, தங்கள் வசம் உள்ள இலங்கை பொருட்கள் அனைத்தையும் சில நாட்களில் அகற்றி விடுவதாக நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் இருந்து இலங்கை பொருட்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.