BREAKING NEWS

ஆங்கிலம் பேசும் பாடசாலை' மார்ச் மாதம் முதல்


ஆங்கிலம் பேசும் பாடசாலை என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு மார்ச் மாதம் 03 ஆம் திகதி மாலை 03 மணிக்கு பண்டாரநாயக்க ஞாப கார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெறுமென ஜனாதிபதி ஆலோசகரும் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான ஜனாதிபதி செயலணியின் அழைப் பாளருமான சுனிமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நடைமுறையிலிருக்கும் வாழ்க்கை திறனாக ஆங்கிலம் என்னும் செயற்றிட்டத்தின் புதியதொரு அம்சமாகவே ஆங்கிலம் பேசும் பாடசாலை நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப் படுகிறது.
முதல் கட்டமாக இந்நிகழ்ச்சித் திட்டம் மூன்று பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் சுமார் 4500 மாணவர்கள் நேரடியாக பயனடைவரெனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறப்பு அதிதியாக பிரிட்டிஷ் மற்றும் பிரிட்டிஷ் உயர் ஸ்தானி கராலயத்திற்கான விசேட பிரதிநிதி, 350 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வினை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
தொழில்நுட்பத்திற்கூடாக ஆங்கிலம் கற்பிப்பதற்கான மென்பொருள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவினரால் ஆங்கில ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தக் கூடிய விதத்தில் தொழில்நுட்பத்திற்கூடான ஆங்கில பாடத்திட்டம் தனித்தனியாக வடிவமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
க. பொ. த. சாதாரணதரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம் பேசுதல் மற்றும் செவிமடுத்தலுக்கான பிரத்தியேக புள்ளிகள் உள்வாங்கப்பட வேண்டுமென்பது தொடர்பிலான அறிக்கையினை கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார். இதற்கேற்ற வகையில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் தயக்கமின்றி தமது நாட்டிற்குரிய பாணியில் ஆங்கிலம் பேசவேண்டுமெனும் நோக்கிலேயே தகவல் தொழில்நுட்பத்தினூடாக ஆங்கிலம் கற்பிக்கும் முறைமை இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.
எமது மாணவர்கள் தமது தாய் மொழியில் சுயமாக சிந்திக்க வேண்டிய அதே நேரம் ஆங்கிலத்தில் தயக்கமின்றி பேசவும் பிழையற எழுதவும் வேண்டுமென்பதே ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரதான குறிக்கோளாகும். அதற்கு ஏற்ற வகையில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயிரம் பாடசாலைகளிலும் மேற்படி ஆங்கிலம் கற்பிக்கும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
இதற்கென விசேட மொழி மற்றும் கணனி ஆய்வுகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar