BREAKING NEWS

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும்வரை ஆட்சிமாற்றத்துக்கு இடமேயில்லை


நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை ஆட்சி மாற் றத்துக்கு இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

2016 வரை மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எனினும், எச்சந்தர்ப்பத்திலும் நாம் தேர்தல் நடத்த தயாராகவே உள்ளோம். தேர்தலுக்கு நாம் பயந்தவர்களல்ல எனவும் தெரிவித்தார்.
எதனையும் நாம் மேற்கொள்வது சர்வதேச அழுத்தங்களுக்குப் பயந்து அல்ல, சர்வதேச அழுத்தங்களுக்கு அன்றி மக்கள் விருப்பத்துக்கு நாம் எப்போதும் தலைவணங்குகிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
செய்வதற்கும் சொல்வதற்கும் எதுவுமில்லாத எதிர்க் கட்சியினரே எமக்கு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அந்தளவு வங்குரோத்து நிலையில் உள்ளனர். சேறு பூசுவதை விட்டு விட்டு எம்மோடு சேர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டு ள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அதில் வடக்குக்கு வளங்கள் பகிரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வும் குறிப்பிட்டார். இதனை முற்றாக மறுப்பதாகவும் 4 பில்லியன் ரூபா வளங்கள் வடக்குக்கு வழங்கப்பட் டுள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடக்குக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவில்லை என குறை கூறுகின்றனர். இதுபற்றி நான் சுகாதார அமைச்சில் கவனத்தைச் செலுத்தியபோது ஏனைய பகுதிகளை விட அதிகளவு அம்புலன்ஸ் வண்டிகள் வடக்குக்கே பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதை அறிய முடிகிறது எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
இரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் 30 வருடம் யுத்த சூழலில் அகப்பட்டிருந்தோம். பயங் கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே வாழ்கின்றனர்.
தெற்கு மூலை வரை குண்டுகள் வெடித்தன. அக்குரஸ்ஸ, காலி போன்ற பகுதிகளிலும் கொழும்பில் இரத்மலானை, தெஹிவளை போன்ற பகுதிகளிலும் குண்டுகள் வெடித்தன. அநுராதபுரம் ஸ்ரீமஹாபோதி, கண்டி தலதா மாளிகை, காத்தான்குடி பள்ளிவாசல் என மதத் தலங்களிலும் குண்டுகள் வெடித்து மக்கள் பலியாயினர். இதுபோன்ற சமூக சூழலே அன்றிருந்தது.
மனித உரிமை பற்றி பேசும்போது வாழ்வதற்கான உரிமையை விட மேலான ஒன்று இருக்க முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் உட்பட அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்க எம்மால் முடிந்தது.
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் எமக்கிருந்த பாரிய சவால் 30 வருட பின்னடைவை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு வருவது என்பதே அதற்காக திட்டமிட்டு செயற்பட நேர்ந்தது.
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மீளக் குடியேற்றியுள்ளோம். அங்குலம் அங்குலமாக புதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகளை அகற்றினோம். சேதமாக்கப் பட்டிருந்த பாதைகள், பாலங்கள், மின் இணைப்புக்கள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என அனைத்தையும் மீளக்கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்று அதனை நிறைவேற்றினோம்.
தமிழ் மக்களை மீளக்குடியேற்றியாயிற்று. எனினும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் துரத்தப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அப்பகுதியில் அவர்கள் மீளக் குடியேறுவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்வது அவசியம்.
நாட்டில் எப்பகுதியிலும் எவரும் வாழக்கூடிய உரிமை உள்ளது. அதுதான் அடிப்படை மனித உரிமை என நான் நம்புகிறேன். வாழ்வதற்கான உரிமை போலவே மீளக் குடியேறும் உரிமையும் உள்ளது. இந்த உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் இப்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சிக்கல்கள் வடக்கு மக்களுக்கல்ல. சில அரசியல்வாதிகளுக்கும் வெளிநாடு களிலுள்ள சில பிரதிநிதிகளுக்கும் மற்றும் அந்நாடுகளின் ஆதரவில் பிழைக்கும சில அரச சார்பற்ற அமைப்புகளுக்குமே பிரச்சினை உள்ளது. இதுவே உண்மை நிலை.
இப்போது வடக்கில் சிறுவர் படைகளிலில்லை சிறுவர்கள் அங்கு பாடசாலை செல்கின்றனர். இத்தகையோர் அச்சிறுவர்கள் பற்றி பேசுவதில்லை. எமது நடவடிக்கைகளுக்கு குறைந்த பட்சம் நன்றி கூறலாம். எம்மிடம் சரணடைந்த 24,000 த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை மீள சமூக மயப்படுத்தியுள்ளோம். சிறைச்சாலைகளன்றி சமூகமே எத்தகைய ஒருவரையும் புனர்வாழ்வளிக்க சிறந்த இடம் என நாம் நம்புகின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar