பத்து கோடி ரூபா செலவில் கல்முனையில் 5 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்!
கல்முனை மாநகர பிரதேசங்களில் ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இதற்காக சுமார் பத்து கோடி ரூபா நிதியை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகான சபை உயர் அதிகாரிகளுடன், தான் ஆலோசித்திருப்பதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே முதல்வர் மேற்படி திட்டம் குறித்து பிரஸ்தாபித்து விளக்கமளித்தார்.
சாய்ந்தமருதில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம், கல்முனையில் நவீன சந்தைத் தொகுதி, மருதமுனையில் நவீன கேட்போர் கூடம், நற்பிட்டிமுனை- சேனைக்குடியிருப்பில் ஆடைத் தொழிற்சாலை, மாநகர சபைக்கு பொதுவான விலங்கறுமனை ஆகியவையே சில உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பேரில் என்னால் இனம் காணப்பட்டுள்ள திட்டங்களாகும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர்கள் முதல்வரின் திட்டங்களை பாராட்டி பேசியதுடன் அதற்காக தாம் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தனர்.