சம்மாந்துறை பிரதேச சபையை இரண்டு உள்ளூராட்சி சபைகளாக பிரித்து, நகர சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். ஆனால் இதுவரை காலமும் இந்த விடயம் தொடர்பாக எவரும் என்னை வந்து சந்தித்து கோரிக்கை விடுக்கவில்லை என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா
தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் எழுதிய ‘காமரி முதல் கிராம நிலதாரி வரை’ எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
சம்மாந்துறைப் பிரதேசத்தின் அபிவிருத்தி விடயத்தில் கட்சி பேதங்கள் மறந்து அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற முன்வர வேண்டும். வெறும் பிரதேசவாதங்கள் பேசிக் கொண்டிருப்பதனால் எந்தவொரு அபிவிருத்தியினையும் பெற்றுக் கொள்ள முடியாது.
சம்மாந்துறை பிரதேசம் தொடர்பாக நான் பல கனவுகளுடன் பணியாற்றி வருகின்றேன். சம்மாந்துறை மண்ணுக்கு இரண்டு உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த எண்ணியுள்ளேன். அதாவது நகர சபை ஒன்றினையும் பிரதேச சபை ஒன்றினையும் ஏற்படுத்தி அவற்றுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் இதுவரை காலமும் இந்த விடயம் தொடர்பாக பேச என்னிடம் யாரும் வந்ததில்லை. மேடைகளில் சந்தர்ப்பவாதம் பேசிவிட்டு- இந்த பிரதேசத்துக்கு உதவி செய்யாதவன் என்று என்னை குறைகானவெ சிலர் முயற்சிக்கின்றனர். நான் இந்த ஊரின் அரசியல் தலைவனாக இருந்து மறைந்த தலைவர் அன்வர் இஸ்மாயிலுடன் இணைந்து பல பணிகளை ஆற்றியுள்ளோம்
எந்தவொரு விடயத்திலும் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும். அரசியலுக்காக நான் ஒருபோதும் பொய்களை கூறுபவன் அல்ல. யதார்த்தங்களையே பேசி வருகின்றேன். தலைவர் மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விடயங்களையே செயல்படுத்தி வருகின்றேன். அரசியலுக்காக காலத்துக்கு காலம் முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பவன் நானல்ல.
அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை என்று பிரித்து பிரதேசவாதம் பேசுவதனால் எந்த வெற்றியினையும் அடைந்து கொள்ள முடியாது. அதற்கு நிறையவே சான்றுகள் உள்ளது. ஆகையினால் இங்குள்ள அனைவரும் ஒன்றினைந்து இந்த ஊரின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி நன்றாக சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். அதற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்க நானா தயாராகவுள்ளேன்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.