விடுதலைப் புலிகளை அழித்தமையினாலேயே சர்வதேசம் எம்மை எதிரியாகப் பார்க்கின்றது. நாட்டில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் விரும்பவில்லை. சர்வதேச விசாரணையை நடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேசம் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. நாட்டிற்கு எதிராக செயற்படுவோர் விரைவில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை புரிந்துகொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது அதிகரிக்கப்படுகின்றமை மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் தடை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளை அழிக்காது நாட்டை பிரித்துக் கொடுத்திருந்தால் இன்று சர்வதேச நாடுகள் எம்மைப் போற்றியிருக்கும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இன்றும் நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்திருக்காது. எனினும், சர்வதேச நாடுகளின் பேச்சிற்கு இடம்கொடுக்காது விடுதலைப் புலிகளை அழித்தமையினாலேயே இன்று பெருமளவிலான நாடுகள் எமக்கு எதிராக செயற்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. முப்பது வருட கால கொடிய யுத்தம் நாட்டின் அமைதியினையும் சமாதானத்தினையும் சீரழித்தது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தமும் தீர்வு காணப்படாத பிரச்சினைகளும் இலங்கையில் இல்லை.
சர்வதேச அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியிருந்த போதிலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுவே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தது. இதுவே சர்வதேசத்தின் அழுத்தங்களையும் எதிர்ப்பினையும் நாம் சம்பாதிக்க காரணமாக அமைந்துவிட்டது.
தற்போது இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தும் ஒரே நோக்கில் ஐ.நா. வும் பல மேற்கத்தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றன. ஜனநாயகம் பற்றி இவர்கள் பேசுகின்றனர். ஆனால், ஓர் ஜனநாயக நாட்டில் அத்துமீறிய விசாரணைகளை நடாத்தத் தீர்மானிப்பது அராஜக செயற்பாடாகும். இது ஜனநாயகத்தை மீறும் செயற்பாடு இல்லையா? இன்று இந்த அரசாங்கத்தை பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். நடை பெற்று முடிந்த தேர்தல்கள் அனைத்திலும் மக்களின் தெரிவு இந்த அரசாங்கமாகவே இருந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு சிறு தொகுதி பிரிவினைவாத சக்திகளின் கதையைக் கேட்டு நாட்டிற்கு எதிராக செயற்படக்கூடாது.
அதேபோல் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தமை எவரினதும் தனிப்பட்ட விருப்பத்திற்காகவோ, பழிவாங்கும் நோக்கத்திற்காகவோ அல்ல. இவர்களை தடை செய்தமை நாட்டின் பாதுகாப்பிற்காகவே. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து வடக்கு மக்கள் போரை மறக்கும் நிலையில் புலம்பெயர் அமைப்புகள் மீண்டும் எமது மக்களின் மனதில் தீவிரவாதத்தினை வளர்க்கின்றன. இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம். அதேபோல் தடை செய்யப்பட்ட உறுப்பினர்கள் குற்றவாளிகள் இல்லையெனின் அவர்களை தடை செய்யப் போவதுமில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேசம் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றமைக்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.
அதேபோல் இன்று சர்வதேச உதவியுடன் அல்லது அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி நாட்டில் பிரிவினையினையும் குழப்பங்களையும் ஏற்படுத்த விரும்புவோர் வெகு விரைவில் இந்த அரசாங்கத்தை புரிந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.