அரசாங்கம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேபானே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
போர் நிறைவடைந்த காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலளார் பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஆகியோரை நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கமே அழைத்திருந்தது.
தற்போது தென் ஆபிரிக்க துணை ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்திருந்தது. இவ்வாறான அழைப்புக்களின் மூலம் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றில் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளையும் ஒன்றாக நடத்த முடிந்திருக்க வேண்டும்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் தனித் தனியான இராஜதந்திர சந்திப்புக்கள் அவசியமில்லை. நாட்டின் பிரச்சினைகளில் தலையீடு செய்யாது இலங்கைக்கு எவரும் விஜயம் செய்வதில் தவறில்லை.
நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதம் தலைதூக்கியுள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும்போக்குவாதத்தின் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர். இதனை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் கடும்போக்குவாதம் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை.
ஞானசார தேரர், மதுமாதவ அரவிந்த ஆகியோரிடம் மட்டும் விசாரணை நடத்துவது போதுமானதல்ல.
அசாத் சலி, முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்வகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதைய பௌத்த சாசன அமைச்சர், பௌத்த மதத்திற்காக எதனையும் செய்யவில்லை.
அரசாங்க பொம்மலாட்டக் குழுவின் தலைவராகவே பௌத்த சாசன அமைச்சர் பிரதமர் டி.எம். ஜயரட்ன செயற்படுகின்றார் என சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.