BREAKING NEWS

தம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது

தம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது பாரிய பின் விளைவுகளை ஏனைய பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. . இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,


உலமா கட்சியின் ஆதரவுடன் இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானது முதல் முஸ்லிம்களுக்கு எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதல் சம்பவமே முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து அநியாயங்களுக்கும் ஆரம்பமாக அமைந்தது.
புனிதப்பிரதேசம் என்ற காரணத்தை வைத்து புனிதமான பள்ளிவாயலை தகர்ப்பதற்கோ, இடமாற்றம் செய்வதற்கோ இடமளிக்க முடியாது என்ற காரணத்தை வைத்தே உலமா கட்சியும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து விலகியது.  அத்தோடு அதில் சம்பந்தப்பட்டோhர் கைது செய்யப்படாமை எதிர் காலத்தில் பல பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என நாம் அரசை பகிரங்கமாக எச்சரித்தோம். இதனை அரசு கேட்கவில்லை. அதன் காரணமாக பாரிய பல விளைவுகளை நாடு கண்டது.

தம்புள்ள பள்ளிவாயலை இடமாற்றம் செய்வது மேலும் பல பள்ளிவாயல்களை இடமாற்றம் செய்வதற்குரிய எடுதுகோலாக மாறி விடும் என்பதை அடிக்கடி நாம் எச்சரித்து வருகின்றோம். இருந்தும் ஜனாதிபதியின் நண்பர் என்ற ஒரேயொரு தகுதிக்காக வக்பு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் தம்புள்ள பள்ளியை வேறு காணிக்கு மாற்ற எடுக்கும் நடவடிக்கை இனவாதிகளின் கைப்பொம்மையாக வக்பு சபை இயங்குகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

வக்பு சபையில் பதிவு பெற்ற பள்ளிவாயலை வேறிடம் மாற்றுகின்ற உரிமை வக்பு சபைக்கில்லை என்பதை வலியுறுத்துகிறோம். மாறாக இருக்கும் பள்ளிவாயலை அதே இடத்தில் காப்பதுதான் வக்பு சபையின் கடமையாகும். தம்புள்ள பள்ளி அதே இடத்தில் இருக்கும் வரைதான் அது தம்புள்ள பள்ளியாகும். அதனை வேறிடத்துக்கு மாற்றினால் அது தம்புள்ள பள்ளியாகாது என்பதை வக்பு சபை உணர வேண்டும்.

இவ்வாறு தம்புள்ள பள்ளிவாயலை வேறிடத்துக்கு மாற்ற வக்பு சபை நடவடிக்கை எடுத்தால் அதனை ஒரு காரணமாக காட்டி பல பிரதேசங்களை இனவாதிகள் புனித பிரதேசமாக அறிவித்துவிட்டு அங்குள்ள பள்ளிவாயல்களுக்கு மாற்றிக்காணி தருகிறோம், கொத்திக்கொண்டு செல்லுங்கள் என நாளை கூறப்படும். தம்புள்ள பள்ளிவாயலுக்கு மாற்றுக்காணி பெற்று இடமாற்றம் செய்ய முடியும் என்றால் ஏன் இந்தப்பள்ளிவாயலையும் இடமாற்றம் செய்ய முடியாது என்றும் கேட்கப்படும்.

ஆகவே வக்பு சபை தம்புள்ள பள்ளியை அதே இடத்தில் வைத்திருக்க முயல வேண்டுமே தவிர அதனை இடமாற்றம் செய்வதற்காக எடுக்கும் முயற்சிகளை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் தம்புள்ள பள்ளியை காக்க வக்பு சபைக்கு முயாது போனால் அவர்கள் பேசாமல் தமது சொந்த வேலைகளை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar