BREAKING NEWS

பொதுபல சேனா ஒரு குட்டிச்சாத்தான் என்றால் அதன் தாய்ச்சாத்தான் ஹெல உறுமயவாகும்



ஹெல உறுமயவுடன் இணைந்திருக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிக்கும் ஆசாத் சாலியும் பீ எம் ஜி ஜியும் சஊதி அரசால் கட்டப்பட்ட 500 வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டாம் என ஹெல உறுமயவால் போடப்பட்டள்ள வழக்கை வாபஸ் பெற்றாலேயே மைத்திரிக்கு தமது ஆதரவு என கூற முன் வராதது ஏன் என உலமா கட்சித்தலைவர்
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினார்.
கல்முனையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஆராயும் ஐக்கிய முஸ்லிம் காங்கிரசின் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எம்மை பொறுத்தவரை சமீப காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த துன்பங்களின் போது வாய் மூடி மௌனமாக இருந்தவர்களே மைத்திரிபால சிறிசேனாவுடன் இணைந்து வருகின்றனர் என்பதை பகிரங்கமாதகவே சொல்லி வருகிறோம். இந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கின்றது என்றும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியல் ஜிஹாத் உள்ளது  என்றும் முஸ்லிம்கள் வந்தான் வரத்தான் என்றும்  பகிரங்கமாக மேடை போட்டு பேசியது இந்த ஹெல உறுமயதான். அத்தோடு நிறுத்தாமல் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முஸ்லிம் நாடாகி விடும் என சிங்கள மக்கள் மத்தியில் பொய்களை சொல்லி அதனை புத்தக வடிவிலும் வெளியிட்டவர்தான் ஜாதிக்க ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க ஆவார்.
ஆக இந்த நாட்டு முஸ்லிம்களைப்பற்றி இல்லாத பொல்லாதவற்றை முதலில் அவிழ்த்து விட்டது ஹெல உறுமயவேயாகும். அவர்கள் சொன்னவற்றை விழுங்கியே போது பல சேனா வாந்தி எடுத்தது.
    ஆக பொதுபல சேனா ஒரு குட்டிச்சாத்தான் என்றால் அதன் தாய்ச்சாத்தான் ஹெல உறுமயவாகும். ஜனாதிபதி நினைத்தால் நிச்சயம் குட்டிச்சாத்தானை கட்டுப்படுத்த முடியும். அத்தகைய தாய்ச்சாத்தான் இருக்கும் இடத்தில்தான் இன்று ஆசாத் சாலியும் மக்களுக்கு நல்;லாட்சி வழங்கப்போகிறோம் எனக்கூறி சமூகத்தை ஏமாற்றும் அமைப்பினரும் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் முயற்சியால் அக்கரைப்பற்றில் சஊதி அரசால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட 500 வீடுகள் ஹெல உறுமய அம்பாரையில் செய்த ஆர்ப்பாட்டத்தினாலும், அது பதிவு செய்த வழக்காலுமே நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டது.
இது பற்றி நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதிய போது இது விடயத்தில் நீதி மன்றத்தின் தடை உத்தரவு உள்ளதாக பதில் வந்தது. ஆக இந்த ஹெல உறுமய நினைத்திருந்தால் இந்த வழக்கை ஒரே நாளில் இன்றே வாபஸ் பெற முடியும். இதற்கான அழுத்தத்தை மைத்திரியுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தி அவ்வாறு நடந்தாலேயே தமது ஆதரவு என கூறியிருக்க முடியும். ஆதனை விடுத்து கொஞ்சமும் சமூக அக்கறை இன்றி இவை எதையும் செய்யாமல் இவர்கள் மைத்திரியுடன் சரணாகதி அடைந்துள்ளதன் மூலம் இவர்களின் தனிப்பட்ட சுயநலனே தெரிகிறது என முபாறக் மௌலவி கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar