கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனத்துக்கு எதிராக நடந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜமீல் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவுசெய்யப்படுவதற்கு மாகாணசபை உறுப்பினர் ஜமீல் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அத்துடன், கட்சியின் தலைவருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜமீல் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப் பட்டிருந்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜமீல் தன்னைச் சந்தித்து, தவறை உணர்ந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மன்னிப்பு வழங்கி கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை இல்லாமல் செய்திருப்பதாக அவர் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஏன் அவருக்கு எதிராக இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தது என்பது தொடர்பில் உரிய விளக்கம் ஜமீலுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கட்சியின் தலைமைத் துவத்தை பல தடவைகள் நெருக்கடிக்கு உள்ளாக்கிய கட்சியின் தவிசாளருக்கு எதிராக ஏன் இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லையென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி யெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், சில விடயங்கள் பெரிய சவாலாக வரும் என நினைத் தால் மாத்திரமே நாம் நடவடிக்கை எடுப்போம். சவால் இல்லாத விட யங்கள் குறித்து நாம் அலட்டிக்கொள் வதில்லை. சிலருடைய சவால்களை வெறும் வாய்சவடால்களாகவே பார்க்கின்றோம்.
எவருடைய நடவடிக்கைகளும் கட்சியைப் பாதிப்பதற்கு இடமளிக்காத வகையில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலிய நடவடிக்கை எடுத்துத்தான் எல்லாவற்றையும் திருத்தவேண்டும் என்ற நிலை இல்லை. தேர்தல் முடிவுகள், மக்களின் முடிவுகள் போன்றனவும் சில வேளைகளில் உரியவர்களுக்கு தகுந்த பாடங்களைப் புகட்டும்.
ஜனாநாயக ரீதியாக நடத்தப்படும் எந்தவிதமான எதிர்ப்புக்களையும் கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்காது. அதேநேரம், ஆர்ப்பாட்டங்களைக் கண்டு பயந்து கட்சி எடுத்த முடிவுகளை மாற் றிக்கொள்ளப் போவதுமில்லை யென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment