விருப்பு வாக்குமுறை முற்றாக மாற்றப்பட வேண்டுமென்பதே எனது அபிப்பிராயம்
பணச் செல்வாக்கின் ஊடாக அரசியலில் பிரவேசித்து விருப்பு வாக்கு முறைமையைப் பயன் படுத்துவதால் அரசியல்வாதியிடம் இருக்க வேண்டிய ஆளுமையும் நற்பண்புகளும் வீழ்ச்சி அடை ந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய தேர்தல் முறைமையைத் தயாரிப்பதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களது கருத்துக்களையும். ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது தொடர்பான சந்திப்பு நேற்று (16 ஆம் திகதி) காலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். அத்தோடு தேர்தல் ஆணையாளர் சட்ட மா அதிபர் அடங்கலான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வரையறையற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதற்கும் விருப்பு வாக்கு முறைமைக்கும் இந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
விருப்பு வாக்கு முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நூறு நாள் வேலைத்திட்டத்திலும் வாக்குறுதி அளித்தபடி தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விருப்பு வாக்கு முறைமை தவிர்ந்த நாட்டுக்குப் பொருத்தமான தேர்தல் முறைமை குறித்து இச்சந்திப்பின் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இச்சமயம் எல்லா அரசியல் கட்சிகளும் தமது அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் முன்வைத்தனர். இங்கு தினேஷ் குணவர்த்தன அறிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
புதிய தேர்தல் முறைமையைத் தயாரிப்பதற்கு அவசியப்படும் பட்சத்தில் உப குழுவொன்றை நியமிக்கும்படி ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி தேர்தல் ஆணையாளராதும் சட்ட மா அதிபரதும் கருத்துக்களையும் கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
Post a Comment