BREAKING NEWS

ஊடாக பலசேனாவினரின் பலம் மேலும் வலுவடையவுள்ளது. -அஷ்ஷேக் றிஸ்வி முப்தி


   ஜம் - இய்யாவின் சகல நடவடிக்கைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவதும், இச் செயற்பாட்டுடனேயே முஸ்லிம் சமூகத்தை சரியான முறையில் வழி நடாத்திச் செல்வதும், சகல உலமாக்களினதும் மிகப் பொறுப்பு வாய்ந்த பணியாகும் என, அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

  கம்பஹா  மாவட்ட உலமாக்களின் ஒன்று கூடல், மாவட்ட ஜம் - இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.லாபிர் தலைமையில், பேலியகொடை - பைதுல் முகர்றமா ஜும்ஆப் பள்ளி வாசலில் (05) சனிக்கிழமை இடம்பெற்றது.

  மினுவாங்கொடை, நீர்கொழும்பு, வத்தளை, திஹாரிய, கஹட்டோவிட்ட, பஸ்யால, மல்வானை ஆகிய ஏழு கிளைகளின் அங்கத்தவர்கள் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர்.

  வெலேகொட - இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் நுஃமான் (இன் ஆமி) யின் சிறப்புரையுடன் மேலும் பல உலமாக்கள் கருத்துத் தெரிவித்த இந்த ஒன்று கூடல் நிகழ்வில், அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தொடர்ந்தும் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது,

  கடந்த காலங்களில் பல்வேறுபட்ட விஷமப் பிரச்சாரங்களையும், இஸ்லாத்திற்கு விரோதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்த பொதுபல சேனாவினர், தற்போது அடங்கி ஒடுங்கி உள்ளனர். எனினும், பொதுபல சேனாவின் அட்டகாசம் முடிவடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக் கூடாது. இவர்களின் பின்னணியில் இஸ்லாத்திற்கு எதிரான அமைப்புக்கள் இயங்கி வருவதையும், நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

  இவற்றின் ஊடாக பலசேனாவினரின் பலம் மேலும் வலுவடையவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் மௌனமாக இருந்து விடாது, எந்நேரமும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உலமாக்களும் இது தொடர்பில் முஸ்லிம்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவும் உலமாக்களின் இன்றைய தேவைகளில் ஒன்றாகும்.

  உலமாக்கள் எப்பொழுதும் சமூகத்திற்கு சரியான வழி காட்டிகளாக இருக்க வேண்டும். சமகாலத்திற்குத் தேவையான தஃவாப் பணிகளைச் செய்ய வேண்டும். நாம் எமது அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் படி நடக்கவும் வேண்டும். உலமாக்களாகிய நாம் இதனைச் செய்யாத பட்சத்தில் வேறு யாரும் இதனைச் செய்யவும் முடியாது. இதனை நாம் விளங்கி வைத்துக் கொண்டு, சரியான பாதையை காட்ட வேண்டும். அமானிதம் எமக்கு முக்கியம் போல், பொறுப்புக்களும் முக்கியம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லா நேரங்களிலும் (மஸ்அலா) புரிந்துணர்வு நம்மிடம் அவசியம் தேவை.

  ஜம் இய்யாவின் ஒவ்வொரு பணிகளும் மக்களுக்கு உரிய நேரத்தில், உரிய முறையில் போய்ச் சேரவேண்டும். ஏனைய மதத்தவர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி சரியான தெளிவை வழங்க வேண்டும். அல்லாஹ் தந்த மார்க்கத்தை அழகாக பின்பற்ற வேண்டும். நபிகளாரின் ஆயிரக்கணக்கான அஹ்லாக்குடைய குணங்களையும் நாம் காண்கின்றோம். அந்தக் குணங்கள் நம்மிடமும் வரவேண்டும். அதை சரியாகவும் முறையாகவும் பின்பற்ற வேண்டும்.

  ஒருவர் மற்றவர்களுடைய குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. வேற்றுமையிலும் ஒற்றுமை தேவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். ஜம் - இய்யாவின் பணிகளிலும்; அதன் முக்கிய பொறுப்புக்களிலும்; நாம் கண்ணும் கருத்துமாக நின்று, புரிந்துணர்வுடனும் கலந்துரையாடல்களுடனும் செயற்பட முன்வர வேண்டும். இதற்கு சகல உலமாக்களினதும் ஒத்துழைப்பும், ஆதரவும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

  முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வரும் இவ்வேளையில், உலமாக்கள் ஒன்றினைந்து செயலாற்றுவது தார்மீகக் கடமையாகும் என, கம்பஹா மாவட்ட பொதுச் செயலாளர் மௌலவி ஏ.எச்.எம்.நுஸ்ரான் குறிப்பிட்டார்.

  மேற்படி ஒன்று கூடலில், தேசிய பிறைக் குழுவின் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் உள்ளிட்ட அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும் பங்கு கொண்டனர். மாவட்ட வலயக் கிளைகளுக்கான புதிய அங்கத்தவர்களினது தெரிவும் இதன்போது இடம்பெற்றது.

                                                                     (kpDthq;nfhil epUgh;)
                               I.V.fhjph; fhd;


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar