BREAKING NEWS

நன்றி கெட்ட மைத்திரியும், மொரகஹகந்தை நீர்த்தேக்க அங்குரார்ப்பணமும்

Ashroffali Fareed
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கடைசி செயற்திட்டமான மொரகஹகந்தை நீர்த் தேக்கத் திட்டம் இன்று முழுமை பெற்றுள்ளது. இனி நீர் நிரப்புவது மட்டும்தான் எஞ்சியுள்ளது. இத்துடன் மகாவலி அபிவிருத்தித் திட்டமும் முழுமை பெறுகின்றது.
மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மிகப் பெரும் தவறொன்றை இழைத்துள்ளார்.
மொரகஹகந்தை நீர்த் தேக்கம் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மூலமாக முன்னெடுக்கப்பட்டதாயினும் அதன் நிர்மாணப் பணிகளில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் பங்கு மறக்கப்பட முடியாதது.
2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட சில மாதங்களின் பின்னர் அன்றைய நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலுக்கும் , மஹிந்வுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தது.
அதன்போது வரண்டு கிடக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கிலான வெஹெரகல நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் குறித்து அன்வர் இஸ்மாயில் தனது அதிகாரிகள் சகிதம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளித்தார். குறித்த நீர்த்தேக்கம் மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியுதவி ஈரானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் மஹிந்த ராஜபக்ஷவை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு இன்றி நீர்ப்பாசன அமைச்சர் என்ற வகையில் அன்வர் இஸ்மாயில் குறித்த செயற்திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி கலந்துரையாடல் மூலம் ஈரானிடமிருந்து பெற்றுக் கொண்டதும் மஹிந்தவை ஆச்சரியப்படுத்தியது.
இதனையடுத்து மகாவலி அமைச்சின் கீழ் வரும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கான உத்தேச வரைபுத்திட்டம் மற்றும் அதற்கான வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்புகள் அன்வர் இஸ்மாயிலிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதற்கு அன்றைய மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
எனினும் மறைந்த அன்வர் இஸ்மாயில் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் காரணமாக மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தின் திட்ட வரைபு உருவாக்கப்பட்டதுடன், வழக்கம் போன்று நிதியுதவி குறித்து ஈரானும் சம்மதம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக 2007ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வைபவங்களில் அன்வர் இஸ்மாயில் கதாநாயகனாகி விடக் கூடாது என்பதற்காக மைத்திரி போட்ட தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
தன்னை வளர்த்துவிட்ட சந்திரிக்காவின் கையில் இருந்த கட்சித் தலைமைப் பதவியை சட்டவிரோதமான முறையில் பறித்து, மஹிந்தவின் கையில் கொடுத்து அன்வர் இஸ்மாயிலைப் பின்னுக்குத் தள்ளும் தனது முயற்சிகளில் மைத்திரி வெற்றி பெற்றிருந்தார்.
தான் பிறந்த மண்ணுக்கான ஹெடஓய நீர்த்தேக்கத்திட்டம் குறித்து பெரும் ஆவலுடன் இருந்த அன்வர் இஸ்மாயில், மஹிந்தவின் நேரடி வேண்டுகோளுக்கு அமைவாக சிறந்த முறையில் திட்ட வரைபுகளை உருவாக்கி, நிதியுதவி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் உரிய வழிமுறைகளை திட்டமிட்டுக் கொடுத்த செயற்திட்டம் இந்த மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம். 2010ம் ஆண்டுக்குள் இந்த செயற்திட்டத்தை பூரணத்துவப்படுத்தவும், நிர்மாணப் பணிகள் அனைத்தும் அன்வர் இஸ்மாயிலின் மேற்பார்வையில் நடைபெறவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக அமைந்திருந்த காரணத்தினால் இந்தச் செயற்திட்டம் பூரணமாக முன்பதாக அமைச்சர் அன்வர் இஸ்மாயில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி (தலைநோன்பு என்று ஞாபகம்) இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
அதன் காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் இன்றைக்கு வரைக்கும் முழுமை பெறாமல் இருப்பதுடன், அன்வர் இஸ்மாயிலின் கனவுத் திட்டமான ஹெடஓயா இன்று வரை ஆரம்பிக்கப்படவும் இல்லாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.
மைத்திரி உண்மையில் நல்ல மனதைக் கொண்டவராக இருந்திருந்தால், அவரின் எந்தவிதப் பங்களிப்பும் இன்றி உருவாக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கத்திட்டத்தின் பூர்த்தி விழாவின் போது அன்வர் இஸ்மாயிலின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். மஹிந்தவுக்கும் அவருக்கும் இருக்கும் அரசியல் பகைமை காரணமாக மஹிந்தவின் பெயரை தவிர்த்திருந்தாலும், அன்வர் இஸ்மாயிலின் பெயரை தவிர்த்திருப்பது பெரும் காழ்ப்புணர்ச்சியும், மாபெரும் தவறுமாகும்.
வெஹெரகல மட்டுமல்ல, மொரகஹந்தவும் இந்த நாட்டில் குறுகிய காலம் அமைச்சுப் பதவி அதுவும் ராஜாங்க அமைச்சுப் பதவி வகித்த ஒரு செயல்வீரனின் சாதனைகளாகும். நண்பர் அன்வர் இஸ்மாயில் அவர்களே, நன்றியுள்ளவர்கள் உங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
( மரணிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் கல்கிஸ்ஸையில் அன்வர் இஸ்மாயில் நிர்மாணித்துக் கொண்டிருந்த வீட்டின் முன்பாக தற்செயலாக அவரைச் சந்தித்திருந்தேன். என்ன மினிஸ்டர், வீடு அழகாக கட்டி விட்டீர்கள். பெரும் சந்தோசமாக இருக்குமே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், இல்லை அஷ்ரப் அலீ, ஹெடஓய திட்டம் நிறைவேறினால் இதனை விடவும் சந்தோசமாக இருக்கும். மஹிந்ததான் என்னை மொரகஹகந்தைக்குள் மாட்டி விட்டுள்ளாரே என்று கூறிவிட்டு சிரித்தார்.
தன் மனைவி பிள்ளை விட தான் பிறந்த மண்ணை நேசித்த அன்வர் இஸ்மாயில் இன்று அரசியல்வாதிகளால் மட்டுமன்றி, அம்பாறை மக்களாலும் மறக்கப்பட்டுவிட்டார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar