BREAKING NEWS

ஒலுவில் கிராம பிரச்சினையில் அரசாங்கம் உடடியாக தலையிட வேண்டும். - உலமா கட்சி


ஒலுவில் துறைமுகத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்து அதனை அம்பாரை மாவட்ட மீன் பிடி படகுகள் தரிப்பிடமாக மட்டும் செயற்படுத்த முன் வருவதோடு மேற்கொண்டு விஸ்தரிப்பு பணியை நிறுத்தி கடலரிப்பை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஒலுவில் துறைமுகம் என்பது தூர நோக்கற்ற சிந்தனை என்று அது பற்றிய பேச்சுக்கள் இடம் பெற்ற அக்காலத்தின் போதே சொல்லப்பட்டது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் அம்பாரை மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றே ஒலுவில் துறைமுகத்தை ஆதரித்தார். இது விடயத்தில் சிங்கள பேரினவாதம் மிகவும் தூர நோக்கோடு சிந்தித்து வெற்றியடைந்ததைத்தான் காண முடிகிறது.

ஒலுவில் என்பது மிகவும் அழகிய பாரம்பரிய கலாசாரத்தை கொண்ட கிராமமாகும். அந்த அழகிய கிராமம் இன்று சிதைவடைந்து சின்னா பின்ணனமாகியுள்ளமை கவலைக்குரியதாகும். ஒலுவில் துறைமுகம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட ஒலுவில் மக்களின் சுவீகரிக்கப்பட்ட காணிகள் பலவற்றுக்கு கூட இன்னமும் நிவாரணம் வழங்கப்படவில்லை.  கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் உலமா கட்சி இது விடயத்தில் காரசாரமாக குரல் எழுப்பியதோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரை இது விடயத்தை கொண்டு சென்றதால் சிலருக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது. இத்தனைக்கும் ஒலுவிலை உள்ளடக்கி கடந்த 27 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே அரசியல் அதிகாரம் கொண்ட கட்சியாக இருந்தும் அம்மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

ஒலவில் மக்கள் தமது ஊரை காப்பாற்றவும், நிவாரணம் பெறவும், எதிர் காலத்தில் ஒலுவில் சூறையாடப்படுவதையும் தடுக்க வேண்டும் என்றால் அம்மக்கள் முதலில் அரசியல் ரீதியில் விழிப்புணர்வு பெற்று முதலில் முஸ்லிம் காங்கிரசுக்கெதிராக களமிறங்க வேண்டும் என பல வருடங்களாக உலமா கட்சி சொல்லி வருகிறது. ஆனால் அம்மக்களில் பலர் இன்னமும் இது விடயத்தை அறிவுபூர்வமாக பார்க்காது உணர்வு பூர்வமாகவே பார்க்கிறார்கள்.

ஆகவே இது விடயத்தில் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு ஒலுவில் துறைமுகம் என்ற எடுதுகோளை நீக்கி விட்டு அதனை அம்பாரை மாவட்டத்துக்கான மீனவர்களின் படகுகளை நிறுத்துமிடமாகவும் மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar