BREAKING NEWS

காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் - அ.இ.ம.கா


காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் கொடுமைகளையும் – உரிமை மீறல்களையும் அ.இ.ம.கா வன்மையாகக் கண்டிக்கிறது
கடந்த சில நாட்களாக காஷ்மீர் மக்களுகெதிராக நடத்தப்படும் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனம் மற்றும் மனித படுகொலைகள் மனித நேயத்தையும் மனித தர்மத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது, தமது நாட்டு மக்களை தமது இராணுவமே கொன்று குவிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பலஸ்தீன், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடக்கும் மனித படுகொலைகளுக்கு, காஷ்மீரில் நடக்கும் கொலைகள் இரண்டாம் தரத்தில் இல்லை.
இந்தியாவில், தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் காஷ்மீர் மக்களுக்காக குரல் எழுப்பி இருப்பதை நாம் பாராட்டுகின்றோம்.
தனது நாட்டில்தனது சகோதர இனத்துக்கு எதிராக இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்படும் அட்டூழியத்துக்கு எதிராக குரல் கொடுத்த அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்பட்டும் ஆயிரக் கணக்காண பெண்கள் கற்பழிக்கப்பட்டும் குழந்தைகள் அடித்து துன்புறுத்தப்பட்ட காணொளியின் ஆதாரம் கொண்டு  அவர் நிரூபித்திருப்பது எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அவரின் கூற்றுப்படி, காஷ்மீர் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து. (1947)இதுவரை 92,000 மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காஷ்மீர் மக்கள் தமது உரிமைகளுக்காக   போராடுகின்றனரேயன்றி  அவர்கள் தீவிரவாதிகளல்லர்.
கருணையையும், ஜீவகாருண்யத்தையும் போதித்த புத்தரும் – அஹிம்சாவாதத்தை போதித்த காந்தியும் பிறந்த இந்தியாவில் இந்தகைய அராஜகமும் இனப்படுகொலையும் நடப்பது – ஆச்சிரியத்தையும் அதிர்ச்சியையும் தருவதாகவே அமைந்துள்ளது.
காஷ்மீர் சம்பந்தமாக 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய காஷ்மீரில் மக்கள் வாக்கெடுப்பொன்றை  (plebiscite)நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு என்பதே உலக அபிப்ராயமாகும்.
இந்திய அரசு இவ்விடயத்தில் சுமூகமான தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
எஸ்.சுபைர்தீன்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar