BREAKING NEWS

முஸ்லிம்களின் அபிலாஷைகள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது! -அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா-



-எம்.வை.அமீர்-
கடந்தகால ஆட்சியில் தங்களது அபிலாஷைகள் நிறைவேறவில்லை என்றும் அதனை புதிய ஆட்சியினூடாக அடைந்துகொள்ளலாம் என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஆட்சிக்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்தனர். 
ஒரு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் இந்த புதிய அரசு முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் விரைவான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர்,சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்தார்.
நேற்றைய தினம் (2016-09-10) அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா கிழக்குமாகாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் அதன்போது அம்பாறை மாவட்டம் மாளிகைக்காட்டில்கவிஞரும்,எழுத்தாளரும்,ஊடகவியலாருமான எஸ்.ஜனூஸின் இல்லத்தில் சிவில் சமூக பிரதி நிதிகள்,புத்த ஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான நட்புறவான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே மசூர் மௌலானா அவர்கள் 
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சிநேகபூர்வ சந்திப்பில் இந்த புதிய அரசில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகள்,அவசர தேவைகள்  இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவைகளை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள்  முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விசேடமாக சவூதி அரசின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட  நுரைச்சோலை வீட்டு திட்டத்தை பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு விரைவாக வழங்கப்படவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை அரசில் அங்கம் வகிப்போர் வழங்கி அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிழக்குமாகாணம் விவசாயத்தில் பிரபல்யமிக்க மாகாணமாகையால் குறித்த விவசாயத்துடன் தொடர்பான முதலீட்டாளர்களைக் கொண்டுவந்து இம்மக்களின் உற்பத்திகளை அதிஉச்ச விலைக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன் இது தொடர்பான வேலைவாய்ப்புக்களையும் இப்பிராந்திய இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சந்திப்பின்போது இப்பிராந்திய பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாகவும்  மாணவர்களின் கல்வி விருத்திக்காக  எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விடயங்களை புரிந்துகொள்வதில் அரபுமொழியை கற்றுக்கொள்வது சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar