BREAKING NEWS

ஆபத்து நமது தலைக்கு மேல் வந்து விட்டது

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகளை சிறியதாக்கி முஸ்லிம்களை அடிமைகளாக்கும் திட்டமே மஹிந்த காரத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,

ஒரு பெரிய விடயத்தை சிறியதாக்க வேண்டும் என்றால் அந்த பெரிய விடயத்தின் அருகில் இன்னொரு பெரிய விடயத்தை போட்டால் ஏற்கனவே பெரிதாய் இருந்த விடயம் தானாகவே சிறிதாகிவிடும்.

முஸ்லிம்களை பொறுத்த வரை தமிழ் பேரினவாதம், வடக்கு கிழக்கு இணைப்பு என்பன பெரிய விடயமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது. இதன் காரணமாக வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ. ம. சுதந்திர முன்னணிக்கும் பெரும்பான்மையாக வாக்களிக்காத முஸ்லிம் சமூகம் யுத்த வெற்றியை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மஹிந்தவை நேசிக்க ஆரம்பித்தது. இதனை ஐ நாவில் மஹிந்தவுக்கெதிராக பிரேரனை கொண்டு வரப்பட்ட போது சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கொழும்பில் கூடி மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம் பகிரங்கமாகியது.

முஸ்லிம்களின் இம்முன்னெடுப்பு வெளிநாடுகளையும், உள் நாட்டில் உள்ள சில கட்சிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டோர் பெரும்பாலும் பேருவல, மற்றும் தென் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள். இதன் காரணமாக நோர்வேயும் டயஸ்போராவும், மஹிந்தவுக்கெதிரான அரசியல் கட்சிகளும் முஸ்லீம் காங்கிரசும் திட்டம் தீட்டின. மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்காதவரை அவரை வீழ்த்த முடியாது எனக்கண்ட அவர்கள் பொதுபல சேனாவை விலைக்கு வாங்கி களத்தில் இறக்கினர்.

அதன் பின் முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர் நோக்கும் தமிழ் பேரினவாதம் என்பது சிறிதாகி சிங்கள பேரினவாதம் பெரிதாக தோற்றம் தந்தது. முஸ்லிம்களும் ஏமாந்து போய் ஆட்சியை மாற்ற உதவினர்.

தற்போது மஹிந்த காலத்தை போன்று பள்ளிவாயல்கள் தாக்கப்படுகிறன. முஸ்லிம்களை ஒரு மணி நேரத்தில் ஒழிப்போம் என்றவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. பொது பல சேனா தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக சுதந்திரமாக செயற்படுகிறார்கள். கொழும்பு முஸ்லிம்களின் பொருளாதாரம் இஸ்ரேல் திட்டத்தில் சிதைக்கப்படுகின்றது. கொழும்பு தமிழ் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அவர்களின் வீடுகளை இடித்து விட்டு மாடி வீட்டு திட்டங்களை ஏற்படுத்தி அதில் பெரும்பான்மையை நிரப்ப முயற்சி நடக்கின்றது. இதன் மூலம் எதிர் காலத்தில் கொழும்பில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதும் ஆபத்தாகி விடும். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாடி வீட்டை காட்டி அவர்களின் நிலச்சொந்த உரித்தை நீக்கி வந்தான் வரத்தாரக்கும் முயற்சி மிக கட்சிதமாக திட்டமிட்டு நடக்கிறது. முஸ்லிம் சமூகமோ ஆகா மஹிந்தவை விரட்டி விட்டோம். அதுவே நமக்கு போதும் என கண் மூடியிருக்கிறது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் செத்துப்போய்க்கிடந்த தமிழ் பேரினவாதம் மீண்டும் உயிர் பெற்று தாண்டவமாடுகிறது. வடக்கு கிழக்கு இணைப்புக்கான முஸ்தீபுகள் பாரிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றன. பெரிய விடயங்கள் சிறிதாக்கப்பட்டதால் முழு முஸ்லிம்களும் அடிமைப்படுத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே ஆபத்து நமது தலைக்கு மேல் வந்து விட்டது. முஸ்லிம்கள் மூளையை பாவித்து தமது எதிர் கால அரசியல் பற்றி சிந்திக்க வேண்டும். தம்மை ஏமாற்றுவோர் யார் தமக்காக சுயநலன் இன்றி அரசியல் செய்வோர் யார் என்பதை இனம் கண்டு எதிர்கால சந்ததிகளின் இருப்பை கவனத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட முன் வர வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar