நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று (29.09.2016) பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், புத்திஜீவிகள், மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நல்லாட்சியில் இன்று முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தால் அங்குள்ள சிங்கள முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவேண்டி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த இணைப்பை பசில் ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திர முஸ்லிம் முற்போக்கு முன்னணியும் உலமா கட்சியும் வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றில் , நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏற்பட்டுள்ள பாரதூரமான சவால்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.அஸ்வர், முன்னாள் மேல் மாகாண ஆளுநரின் இரு புதல்வர்களான நகீப் மௌலானா, நஜீப் மௌலானா, பேருவளை முன்னாள் நகரசபை தலைவர் மிள்பர் கபூர், பேருவளை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயீல், வெலிகம முன்னாள் நகரசபைத் தலைவர் முஹம்மத், பாணந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இபாஸ் நபுஹான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல் சத்தார், ரக்வானை, கொடகவளை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் A.R.M.தாவூஸ், தெஹிவளை - கல்கிஸ்சை முன்னாள் நகரசபை உறுப்பினர் சாபித், கல்முனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் புதல்வர் நவாஸ் முஸ்பா, மன்னார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நகரசபை வேட்பாளர் B.ஜஸார், மல்வானை பிரபல வியாபாரி இஸ்மாயில் ஹாஜியார், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான அடுத்த கட்டச் சந்திப்பு எதிர்வரும் 05.10.2016 ஆம் திகதி பிற்பகல் 3.௦௦மணிக்கு நெலும்மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
Post a Comment