BREAKING NEWS

மட்டு மாவட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் களத்தில்



யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காணும் நோக்குடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். 
இதன்போது, வவுனத்தீவு, ஆரயம்பதி, வாகரை, மண்முனை, காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பொதுமக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றன. 
கல்வித்துறையில் உள்ள ஆளணி பற்றாக்குறை, குடி நீர் பிரச்சினை, காட்டு யானை அத்துமீறல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் வவுனத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
காத்தான்குடி மற்றும் ஆரயம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அப்பிரதேசங்களில் நிலவும் வைத்தியசாலை ஆளணி பற்றாக்குறை, வீதி – மின்சார பிரச்சினைகள், குப்பை பிரச்சினை, தொல் பொருட்கள் தொடர்பான பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார். 
விசேடமாக, ஆரயம்பதி தபாலகத்தை தரமுயர்த்தி தரும்படி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய அமைச்சருடன் கலந்துரையாடி விரைவில் தீர்த்து வைப்பதாக இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார். 
இதேவேளை, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வன்செயல்களினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு, கொட்டில்களில் அடிப்படை வசதிகளின்றி வாழும் மண்முனைப் பிரதேச மக்களது வீடில்லா பிரச்சினை தீர்த்து வைக்கும் முகமாக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் அனுசரணையில் ஒல்லிக்குளம் கிழக்கு, ஒல்லிக்குளம் மேற்கு, கீச்சான்பள்ளம் மற்றும் மண்முனைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar