BREAKING NEWS

சஊதி வீடுகளை முஸ்லிம் அல்லாதாருக்கும் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது

சஊதி அரசினால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக அக்கரைப்பற்று நுரைச்சோலையில் கட்டப்பட்ட வீடுகளை முஸ்லிம் அல்லாதாருக்கும் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

மேற்படி வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவே சஊதி அரேபிய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. ஆனால் அவை முஸ்லிமகளுக்கு மட்டும் வழங்கக்கூடாது என இனவாத கட்சியான  ஹெல உறுமயவினால் வழக்கு தொடரப்பட்டது. அதன் படி நாட்டின் இனவிகிதாசார முறைப்படி மேற்படி வீடுகளை பகிர்ந்தளிக்கும் படி நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த மஹிந்த அரசு மூவின மக்களுக்கும் இதனை பகிர்ந்தளிக்க முற்பட்ட போது முஸ்லிம்களால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இது விடயம் கைவிடப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி நினைத்திருந்தால் இதனை சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்க முடியும்.

இந்த நிலையில் கடந்த அரசு பிழை என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சியில் இந்த வீடுகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இன்றைய ஜனாதிபதியும் நினைத்தால் தனது அதிகாரத்தின் மூலம் நீதிமன்ற தீர்ப்பை செயலிழக்க செய்து முஸ்லிம்களுக்கு வழங்க  முடியும். அதனை விடுத்து நாட்டின் இன விகிதாசாரத்துக்கேற்ப இவ்வீடுகளை வழங்குவது நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்களை படுகுழியில் தள்ளுவதாகும்.

மேற்படி சவூதி வீட்டுத்திட்டத்தை நீதி மன்றம் நாட்டின் இன விகிதாசாரத்துக்கேற்ப வழங்கும்படியே தீர்ப்பளித்துள்ளதே தவிர அம்பாரை மாவட்ட இனவிகிதாசாரப்படி அல்ல. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் நீதி மன்ற தீர்ப்பின் படியே வழங்கச்சொல்லியுள்ளதால் அதன் படி 500 வீடுகளில் 8 வீதமான முஸ்லிம்களுக்கு சுமார் 40 அல்லது 50 வீடுகளே கிடைக்கும். இந்த நிலையில் சுமார் 350 சிங்கள குடும்பங்களுடன் சிங்களம் தெரியாத முஸ்லிம்கள்  அதுவும் கிழக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியுமா? கலாசார சீரழிவுகள், மகளைக்காணவில்லை என்ற ஒப்பாரிகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டி வரும். இது சேலை வாங்கப்போய் சேற்றில் விழுந்த கதையாகவே முடியும்.

அம்பாரை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடுகள் கிடைக்கப்பெறாத சிங்கள, தமிழ் மக்கள் இருந்தால் அவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் சில வீடுகளை கொடுப்பதை உலமா கட்சி எதிர்க்கவில்லை.  ஆனாலும் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடுகள் வழங்கப்படாமல் முஸ்லிம்களே உள்ளதாக அறிகிறோம்.

ஆகவே இதில் ஜனாதிபதி அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு முடியாது என்றால் அந்த வீடுகளை யாருக்கும் வழங்கப்படாமல் அப்படியே விட்டு விடுவதன் மூலம் எதிர் காலத்தில் வரப்போகும் இன்னொரு ஜனாதிபதியாவது இதில் நியாயம் பெற்றுத்தர இடமளித்ததாக முடியும்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar