BREAKING NEWS

பதுரிய மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் நயீமுடீன் ஆசிரியருக்கு தேசமான்ய விருது



(நஸீஹா ஹஸன்)

கல்வித்துறை வளர்ச்சிக்கு 35 வருடகாலம் பாரிய சேவையாற்றியமைக்காக மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், மெஸ்டா அச்சக நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ். எம்.ஜே.எம்.நயீமுடீன் ஆசிரியர்  “மனித உரிமைக்கான தேசமான்ய விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

‘மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்’ நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கும் இந்த கௌரவ விருது, எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்னசிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் 35 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் பாரிய சேவையாற்றிய நயீமுதீன் ஆசிரியர், 20 வருடங்கள் அதிபர் சேவையிலும் கடமையாற்றியிருந்தார். இறுதியாக மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் அதிபராக சேவையாற்றியிருந்த இவர், அப்பாடசாலை தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்கும், சப்ரகமுவ மாகாணத்தில் முன்னணி பாடசாலையாக தரம் உயர்த்துவற்கும் அளப்பரிய சேவையாற்றியிருந்தார். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்த ஓய்வு பெற்ற பின்னரும் கல்வித்துறை சார்ந்த பல வேலைத்திட்டங்களை மாவனல்லை கல்வி வலயத்தில் இவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கல்வித்துறையில் பாரிய சேவையாற்றியமைக்காவே நயீமுடீன் ஆசிரியருக்கு “மனித உரிமைக்கான தேசமான்ய விருது” வழங்கப்பட்டிருந்தது. 
மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சரீக் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதுதவிர, விசேட அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்னசிங்கம், மாகாண சபை  உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே. மொஹமட் லாஹிர், ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar