BREAKING NEWS

மாணிக்கமடு புத்தர் சிலை: அமைச்சர்களான ஹக்கீமும், மனோ கணேசனும் அரசிடம் சோரம் போய்விட்டார்கள்


மாணிக்கமடு புத்தர் சிலை சம்பந்தமாக அமைச்சர்களான ஹக்கீமும் மனோ கணேசனும் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தும் அதனை நீக்க ஜனாதிபதி உத்தரவாதம் தராததன் மூலம்  அமைச்சர்களான ஹக்கீமும், மனோ கணேசனும் அரசிடம் சோரம் போய்விட்டார்கள் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.; மேற்படி சிலை வைப்பு சம்பந்தமாக கட்சிக்காரியாலயத்தில்  மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாணிக்கமடு புத்தர் சிலை சம்பந்தமாக ஹக்கீமும் மனோ கணேசனும் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த போது இதுவொரு அனாவசியமான விடயம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் அனாவசியமான இந்த விடயத்தில் தான் தலையிட்டு அச்சிலையை சிங்கள மக்கள் வாழும் பகுதிக்கு கொண்டு செல்வேன் என ஜனாதிபதி சொல்லவில்லை. அவ்வாறு சொல்ல வைக்க அமைச்சர்களான ஹக்கீமாலும், மனோ கணேசனாலும் முடியவில்லை என்பதன் மூலம் இவர்கள் பதவிக்காக சோரம் போனவர்கள் என்பது தெளிவாகிறது.
கடந்த மஹிந்த ஆட்சியின் இறுதிக்காலத்தில் இவ்வாறு சில சிலை வைப்புகள் நடைபெற்ற போதும் அவை இனவாத பௌத்த அமைப்புக்களினாலேயே வைக்கப்பட்டிருந்தனவே தவிர அரசின் எந்தவொரு சிங்கள அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலமும் வைக்கப்படவில்லை. ஆனால் இந்த அரசில் சிங்கள அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலம் தமிழ் பேசும் பகுதியில் சிலை வைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் இன்னமும் அதனை நீக்குவதற்குhதிய அழுத்தத்தை அரசுக்கு கொடுப்பதற்கு முடியாத தலைமைகளாகவே சிறுபான்மை தலைமைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். அப்படியிருந்தும் அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அவர்களின் அமைச்சரவை தலைவராலும் இதற்கு தீர்வு காண முடியவில்லை என்றால் இதை விட மோசமான சோரம் போதல் இருக்க முடியாது.
சிலர் கேட்கிறார்கள் இது விடயத்தில் உலமா கட்சி இணைந்திருக்கும் அ. இ. மக்கள் காங்கிரஸ் தலையிடலாம்தானே என. உண்மையில் அக்கட்சித்தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் இது விடயத்தில் தனது கவனத்தை எடுத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்லலாம். ஆனால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் ஆணை பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் போது உங்கள் கட்சி அம்பாரை மாவட்டத்தில் தோற்ற கட்சி என்பதால் உங்களுக்கு இது பற்றி பேச முஸ்லிம்கள் ஆணை தரவில்லை எனக்கூறப்படும் சாத்தியமும் அரசியலில் உள்ளது. அதே போல் இதற்கு முஸ்லிம் காங்கிரசும் ஆட்சேபணை தெரிவிக்கும். கடந்த காலங்களில் கல்முனைக்கான அபிவிருத்திகள் மாற்று கட்சிகளால் கொண்டு வரப்பட்ட போது நாம்தான் செய்ய வேண்டும், இவர்கள் யார் என தடைகள் போட்ட வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசால் இதற்கு தீர்வு காண முடியாது என அவர்கள் பகிரங்மாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும்  ஒன்று சேர்ந்து அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்கும் போது அவரால் நேரடியாக தலையிட முடியும் என்பதே ஜனநாயக அரசியலாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar