( மினுவாங்கொடை நிருபர் )
கட்டுநாயக்க - விமான நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு, இருவழி புதிய பஸ் சேவைகளை, இ.போ.ச. திவுலப்பிட்டி மற்றும் அக்கரைப்பற்று டிப்போக்கள் இணைந்து , ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்துள்ளன.
தினமும் காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படும் பஸ் வண்டி, மினுவாங்கொடை, நிட்டம்புவ, கேகாலை, மாவனல்லை, கண்டி, மஹியங்கனை, அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு வழியாக அக்கரைப்பற்றைச் சென்றடையும். இதே நேரம், மற்றுமொரு பஸ் வண்டி, காலை 6.45 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து புறப்பட்டு, இதே வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.
இதன் ஒரு வழிக் கட்டணமாக 590 ரூபா அறவிடப்படும் என்றும், முன் கூட்டியே ஆசனப் பதிவுகளை, கட்டுநாயக்க மற்றும் அக்கரைப்பற்று பஸ் நிலையங்களில் மேற்கொள்ள முடியும் என்றும் அக்கரைப்பற்று டிப்போ அத்தியட்சகர் எம். ஏ. இர்ஷாத் தெரிவித்தார்.
வைபவ ரீதியாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய இப் பஸ் சேவைகளின் மூலம், கட்டுநாயக்க வர்த்தக வலய தொழிலாளர்கள் மற்றும் விமான நிலையப் பயணிகள், அறுகம்பை உல்லாசப் பயணிகள், பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் நன்மையடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment