BREAKING NEWS

வறுமையை அகற்ற ஜனாதிபதியுடன் இணைந்து கைகோர்ப்போம்.




வறுமையை அகற்ற
ஜனாதிபதியுடன் இணைந்து கைகோர்ப்போம்.
- அமைச்சர் பைஸர் முஸ்தபா
(மினுவாங்கொடை நிருபர்)

இந்த வருடம் “வறுமை ஒழிப்பு வருடம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்காக “தேசிய நல்லாட்சி” என்ற வகையிலும், அரசியல் பிரமுகர்கள் என்ற வகையிலும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்ற ஒருமித்த கொள்கையுடன், கட்சி நிற பேதங்களை மறந்து, இவ்வாண்டிலிருந்து நமது சகல பணிகளையும் ஆரம்பிப்போம். ஆகவே, வறுமையை இலங்கையிலிருந்து அகற்ற ஜனாதிபதியுடன் இணைந்து அனைவரும் கைகோர்க்க இச்சந்தர்ப்பத்தில் முன்வருவோம் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்தார்.

அரச உத்தியோகத்தர்களின் சேவைகளை 2017 ஆம் வருட புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வளாகத்தில், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

நாம் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் நின்று நமது சேவைகளை நாட்டுக்காக செய்வதையே அரசாங்கம் என்ற வகையில் எதிர்பார்க்கிறோம். எனவே, அரச உத்தியோகத்தர்களாகிய நாம் மிகவும் அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டும். இதனால், வறுமையைப் படிப்படியாக இலங்கையிலிருந்து அகற்ற முடியும்.
அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடமைகளை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்யும் போது, மக்கள் சேவை மிகவும் வலுவுள்ளதாகவும் அவசரமாகவும் அமைவதுடன், இதன் மூலம் நாட்டை ஒரு சிறப்பான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும் என்றார்.

அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, பிரத்தியேக செயலாளர் நிஹால் பெரேரா, இணைப்புச் செயலாளர்களான றியாஸ்தீன் சில்மி, பியல் நாணாயக்கார ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐ.ஏ,காதிர் கான்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar