BREAKING NEWS

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான, கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்'



மியான்மரில் சிறுபான்மை ரோஹின்கயா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்' என்று உலக முஸ்லிம் நாடுகளை மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் கேட்டுக் கொண்டார்.

ரோஹின்கயா முஸ்லிம்கள் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக "உலக முஸ்லிம் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின்' (ஓஐசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நஜீப் ரஸாக் கூறியதாவது:

ரோஹின்கயா முஸ்லிம்கள் பிரச்னையை மியான்மரின் உள்நாட்டு விவகாரமாக இனியும் ஒதுக்கிவிட முடியாது.

ஏனெனில், அங்கு நடைபெறும் வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான ரோஹின்கயா இனத்தவர் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இது அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வெகுவாக பாதிக்கும்.

இதுதவிர, மியான்மர் நிலவரத்தைப் பயன்படுத்தி, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போன்ற பயங்கரவாத அமைப்புகள் ரோஹின்கயா சமூகத்துக்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது.

எனவே, அங்கு வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் மியான்மரில், சிறுபான்மை ரோஹின்கயா முஸ்லிம்களுக்கு எதிராக கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் அந்த நாட்டுப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 65,000 ரோஹின்கயா இனத்தவர் மியான்மரிலிருந்து வெளியேறி, அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar