எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்து முடிக்கும் வரை தூங்கிவிட்டு இப்போது மேற்படி அறிக்கையின் அடிப்படையில் உடனடி தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதம் என சில சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கும் அரசாங்கத்தின்; ஜனநாயக விரோத போக்குக்கு விலை போவதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு பயந்து அதற்கு சாட்டாக எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்பதில் பலத்த சிக்கல்கள் உள்ளதாக தொடர்ந்து சொல்லி வந்தது. பின்னர் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் அது அரசின் கையில் கிடைத்து விடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தது.
இந்த வேளைகளில் இது பற்றி காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரஊப் ஹக்கீம் போன்றோர் தலைமையிலான சிறுபான்மை கட்சிகள், தற்போது எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் கையில் ஒப்பiடைக்கப்பட்ட பின் அருண்டெழுந்தவர்கள் போல் மேற்படி எல்லை நிர்ணய அறிக்கையின் படி உடனடியாக தேர்தல் நடத்த வேண்டாம் என அரசை கோரியுள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்படும் போது அதில் சிறு பான்மை மக்களின் பாதக நிலைகளை முறையாக சுட்டிக்காட்டாமல் அவ்வப்போது அரசுக்கு சார்பான ஓரிரு கட்சிகளை மட்டும் அழைத்து பேக்காட்டியவர்களுக்கு இப்போதுதான் வட்டார முறைப்படியான தேர்தலும் எல்லை நிர்ணய அறிக்கையும் பாதகம் என்பது தெரிந்தள்ளதா?. அதுவும் அரசுக்கு சார்பான சிறு கட்சிகள் மட்டுமே கூடி இதனைத்தெரிவித்திருப்பதை பார்க்கும் போது இவர்கள் தேர்தலை வேண்டுமென்றே தள்ளிப்போடுவதற்குரிய அரசின் ஏஜன்டுகளாக செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
வட்டார முறை பிழை என்பது இவர்களுக்கு தெளிவாக தெரிந்த நிலையில் பழைய விகிதாசரப்படியாவது உடனடியாக தேர்தலை நடாத்துவதே ஜனநாயகத்தை மதிப்பதாகும் என இவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் தேர்தலை பின்போடும் அரசின் தந்திரத்துக்கு துணை போவது இவர்களின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Post a Comment