BREAKING NEWS

ஜனாதிபதியின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்



வெலிமடையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++

இனங்களுக்கிடையில் ஒற்றுமை- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெலிமைடயில் தெரிவித்தார். 
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன இணைந்து மாவட்ட மட்டத்தில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு வெலிமடை போகஹகும்பர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 
நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் காரணமாக பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதனை நிவர்த்தி செய்து மூவினங்களுக்கிடையில் பலமான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். அதில் ஒரு அங்கமாகவே இவ்வாறான கூட்டங்கள் மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன. 
பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். தற்போது ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. அதனை சரி செய்வதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய முன்வருவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் முன்னெடுக்கும் பணிகளுக்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் - என்றார். 
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஊவா மாகாண முதலமைச்சர சாமர சம்பத் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar