BREAKING NEWS

பலஸ்தீன் விவகாரம்; இஸ்ரேலை ஆதரிக்கும் நல்லாட்சி


===================
ஜெரூசலத்தில்  இஸ்ரேல் நிர்மாணித்து வரும் சட்டவிரோதக்
குடியேற்றங்களுக்கு எதிராக கடந்த வருடம் ஐ.நாவில் தீர்மானம் ஒன்று
நிறைவேற்றப்பட்டதை நாம் அறிவோம்.

ஆனால்,இலங்கை அரசோ இந்தப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில்
கலந்துகொள்ளவில்லை.இஸ்ரேல் என்ற நாடு பலஸ்தீன மண்ணில் சட்டவிரோதமாக
உருவாவதற்குக்  காரணமாக இருந்த-பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் எல்லாச்
சந்தர்ப்பங்களிலும் இஸ்ரேலை ஐ.நா சபையில் காப்பாற்றி வந்த அமெரிக்காகூட
இந்தப் பிரேரணையில் இருந்து இஸ்ரேலை காப்பாற்றவில்லை.

ஆனால், மஹிந்த அரசோ இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தபோதிலும்,
ஒருபோதும் பலஸ்தீனத்துக்கு எதிராக இருந்ததில்லை.ஆரம்பம்முதல் அவர்
பலஸ்தீன் ஆதரவாளராகவே இருந்து வருகின்றார்.மஹிந்த இலங்கை முஸ்லிம்களுக்கு
செய்த அநியாயத்தை எதிர்க்கின்ற நாம் அவர் பலஸ்தீனுக்கு செய்த நல்லவற்றை
ஆதரித்தே ஆகவேண்டும்.

2012 இல் பலஸ்தீனுக்கு ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்து கிடைத்தபோது
மஹிந்த அரசு அதற்கு ஆதரவு வழங்கியது.அதற்கான  ஐ.நாவின்  பிரேரணைக்கு
ஆதரவாக  வாக்களித்தது.ஆனால்,இந்த அரசு பலஸ்தீன் விவகாரத்தில் இரட்டை
நிலைப்பாட்டுடனேயே செயற்படுகின்றது.

பலஸ்தீனின் ரமளா நகரில் அமைந்துள்ள பலஸ்தீனுக்கான இலங்கை தூதரகத்தில்
இடம்பெற்ற இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை
தூதுவர் பலஸ்தீன விடுதலையை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

இது இலங்கை அரசின் இரட்டை நிலைப்பாட்டையே
வெளிப்படுத்துகின்றது.பலஸ்தீனின் விடுதலையை ஆதரிப்பது உண்மையென்றால்
ஜெருசலத்தில் அமைக்கப்படும் இஸ்ரேலிய சட்டவிரோத குடியிருப்புக்கு எதிரான
ஐ.நாவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஏன் இலங்கை கலந்துகொள்ளவில்லை?

ஐ.நாவில் இஸ்ரேலைக் காப்பாற்றுவதுபோல் செயற்பட்டுவிட்டு பாலஸ்தீனில்
வைத்து பலஸ்தீனுக்கு ஆதரவுபோல் இந்த அரசு காட்டிக்கொள்கிறது. முஸ்லிம்களை
இவ்வாறு ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு  பலஸ்தீன் தொடர்பான அதன்  உறுதியான
நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க வேண்டும்.

[ எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர் ]

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar