ARA.Fareel-
முப்பது வருட காலமாக மரத்தின் அடியிலிருந்து அதன் வளர்ச்சிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்டார்கள். மரமே தனது வாழ்க்கையாக எண்ணியிருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்தது போதும்' என்று தள்ளி வைத்து ஓரம் கட்டி விட்டார்கள்.
ஹசன் அலியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கிடைத்ததும் பலர் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். என்ன நடந்தது சேர்? கூறுவீர்களா? என்று கேட்டோம்.அவர் அமைதியாக, நிதானமாக பதிலளித்தார்.''
டிசம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற உச்ச பீட கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் நானும் தலைவரும் முரண்பட்டு பிரிந்திருக்கக் கூடாது. கட்சி பிளவுபடக்கூடாது. கட்சியை காப்பாற்ற வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. தலைவரும், நானும் கதைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டது.அடுத்த தினம் டிசம்பர் 15 ஆம் திகதி உயர்பீட உறுப்பினர் அன்வரின் தெமட்டகொடையிலுள்ள காரியாலயத்தில் நானும் தலைவரும் சந்தித்தோம். அங்கு வந்த தலைவர் முதலில் வுழூ செய்து கொண்டார். பின்பு இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகையை நிறைவேற்றினார். என்னை கட்டியணைத்து முஸாபஹா செய்து கொண்டார். பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்றார்.
நான் தலைவரிடம் தெரிவிக்க வேண்டியதையெல்லாம் தெரிவித்தேன். நான் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தபோது தேசியப் பட்டியலில் எம்.பி.பதவி தருவதாகக் கூறி அதனைத் தடுத்ததையும் விளக்கினேன். அனைத்தையும் தலைவர் ஏற்றுக்கொண்டார். நான் வுழூவுடன் கதைக்கிறேன். அது நான் தந்த உறுதி. அதனை நான் நிறைவேற்றுவேன் என்றார். தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது. கட்சியை முடக்க முடியாது. தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் கூறினார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்றும் என்னிடம் வினவினார்.
ஜனவரி 9 ஆம் திகதியன்று பாராளுமன்ற அமர்வில் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும். நாளைக்குப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். சகல அதிகாரங்களும் கொண்ட செயலாளர் பதவியை பேராளர் மாநாட்டில் உங்களுக்குத் தருவேன் என்று கூறி தலைவர் என்னை மீண்டும் முஸாபஹா செய்து கொண்டார்.
அப்போது என்றுமில்லாத நம்பிக்கை தலைவர் மீது ஏற்பட்டது. நானும் மஃரிப் தொழுது விட்டு வுழூவுடனே இருந்தேன். சுன்னத் தொழுது விட்டு ஒரு முஸ்லிம் தரும் உறுதி மொழியை நம்பாவிட்டால் நான் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. அதனால் நானும் நம்பினேன்.மறுநாள். அது டிசம்பர் 16 ஆம் திகதி. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவைச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. எமக்கான சந்திப்பு நேரம் பிற்பகல் 3 மணிக்கே தரப்பட்டிருந்தது. நான் அங்கு பிற்பகல் 2.45 மணிக்கே சென்றுவிட்டேன். எமது நேரம் வரும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அலுவலகத்தில் காத்திருந்தேன். அப்போது தலைவர் வந்தார். வந்ததும் எனது கையில் ஒரு பைலைத் தந்தார். அந்தப் பைலினுள் சல்மான் எம்.பியின் இராஜினாமா கடிதம் இருந்தது.
சல்மான் தனது இராஜினாமா கடி(16.12.2016) செயலாளரிடம் கையளிக்கவுள்ளார். இப்போது அதற்காக அவர் பாராளுமன்றத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார் என்றார். ஆனால் சல்மான் தனது இராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான சந்திப்பின் போதும் எனக்கு பொதுச் செயலாளர் பதவியும் தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் வழங்குவதாக உறுதியளித்தார். ஜனவரி 9 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் இருக்க முடியும் என்றும் உறுதியாகக் கூறினார்.
ஜனவரி 7 ஆம் திகதி அல்லது ஜனவரி 8 ஆம் திகதி என நினைக்கிறேன். என்னைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டார். 10 ஆம் திகதிக்கு தாருஸ்ஸலாமுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று தாருஸ்ஸலாமுக்குப் போனேன்.
நான் மூதூருக்குப் போகிறேன். என்னுடன் வாருங்கள் என்று தாருஸ்ஸலாமில் வைத்துக் கூறினார், 15 ஆம் திகதி புத்தளத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. நீங்கள் வரவேண்டும் என்றார். அன்று சல்மானின் இராஜினாமா பற்றியும் பேசினார். சல்மான் ஜனவரி 16 ஆம் திகதியே இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளளார். அதனால் உங்கள் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக 18 ஆம் திகதியே கசெட் பண்ணப்படும் என்றும் தெரிவித்தார்.
புத்தளத்துக்கு நானும் அவருடன் போனேன். இருவரும் இரவு சாப்பாட்டை முடித்தோம். உங்களுக்கு நாளை காலையில் கோல் பண்ணுறேன் என்று கூறிச்சென்றவர் அதன் பின்பு என்னை தொடர்பு கொள்ளவில்லை.
கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கட்டாய உயர்பீட கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவு இடம் பெற்றது. தலைவராக ரவூப் ஹக்கீமும் செயலாளராக மன்சூர் ஏ.காதரும் நியமிக்கப்பட்டனர். எனக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டது. நான் மறுத்தேன். சகல அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் பதவியையே நான் வேண்டி நின்றேன்.நஸீர் அஹமட்டும் அன்வரும் என்னிடம் வந்து தவிசாளர் பதவியை எடுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிறகு தருகிறோம் என்றார்கள். ஹரீஸ் எம்.பியே என்னை இந்தப் பதவிக்கு முன்மொழிந்தார். அவருக்கு நான் நன்றி கூறினேன். ஆனால் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றேன்.
செயலாளர் பதவிக்கான நியமன நேரத்தில் கட்சியின் தலைவர், செயலாளர் நியமிக்கும் அதிகாரத்தை எனக்குத் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மன்சூர் ஏ.காதரே செயலாளராக இருக்க வேண்டும். நான் நியமிப்பவரை விரும்பாவிட்டால் நீக்கிக் கொள்ளலாம் என்றார். நிஸாம் காரியப்பர் இதை நியாயப்படுத்தினார்.
இவ்விடத்தில் ஜவாட் எழுந்தார். நாளைக்குப் பேராளர் மாநாடு. ஹசன் அலி தவிசாளர் பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் அவர் பேராளர் மாநாட்டில் சாதாரண கதிரையில் தான் அமர வேண்டும். அந்தக் காட்சியை எம்மால் பார்க்க முடியாது. அவர்தான் கட்சி என்று கூறினார் ஜவாட். சேர்…. தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் மேடையில் இருக்க வேண்டும் என்றார்கள். கெஞ்சினார்கள்., கோஷம் எழுப்பினார்கள்.
இது என்ன நாடகம்! எனக்கென்று தனித்துவம் உள்ளது. இலட்சியம் உள்ளது. எழுந்து நின்றேன். எனது கண்கள் கலங்கின. உணர்ச்சி வசப்பட்டேன். டிபரன்ட் மூடுக்குள்ளானேன்.எனது 30 வருட அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது என்று கவலையுற்றேன். எழுந்து சென்று லீடரைக் கட்டிப்பிடித்து முஸாபஹா செய்தேன். இது எனது கடைசி நாள் என்றேன்.நான் உயர்பீடக் கூட்டத்திலிருந்தும் வெளியேறினேன். நஸீர், ஜவாட் எல்லோரும் ஓடி வந்து என்னைத் தடுத்தார்கள். நான் எனது முடிவில் உறுதியாக வெளியேறினேன்.
Post a Comment