( ஐ. ஏ. காதிர் கான் )
கம்பஹா மாவட்டத்தில் நேற்று முன் தினம் (28) அதிகாலை முதல் தொடர்ந்து
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க, மினுவாங்கொடை,
திவுலப்பிட்டிய, மீரிகம, கம்பஹா மற்றும் பியகம ஆகிய பிரதேச செயலகப்
பிரிவுகளில் அதிக மழை பெய்து வருவதாக, நிலைய முகாமைத்துவப் பிரிவின் உதவிப்
பணிப்பாளர் ஏ.எம். அஜித் நிஷாந்த சந்திரசிறி தெரிவித்தார்.
சீரற்ற கால நிலை காரணமாக நேற்று வரை, பியகம தொகுதியில் மாத்திரம் 2, 792
குடும்பங்களைச் சேர்ந்த 12, 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
இவர்களுக்கான நிவாரண உதவிகள் தற்போது பியகம பொலிஸார் உள்ளிட்ட சமூக நல
அமைப்புக்களின் ஒத்துழைப்போடு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
இதேவேளை, பியகம - மல்வானை
பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அகில
இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளை செயலாளர் அஷ்ஷேக் யாசிர்
மற்றும் ஜம் - இய்யாவின் ஏனைய உறுப்பினர்களும் மக்களுடன் இணைந்து நிவாரணப்
பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment