எல்லாப்பிரச்சினையும் முற்றி இப்போது மாற்று மதத்தவர்கள் ஏற்பாடு செய்யும் இப்தாருக்கு போகலாமா என்ற பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளார்கள்.
நோன்பு துறத்தல் ஒரு வணக்கம் என்றும் விருந்துக்கு செல்லல் என்பது ஆகுமாக இருந்தும் இப்தாருக்கு செல்லல் கூடாது என சிலர் பதிவிடுவதை காணக்கூடியதாக உள்ளது.
இன்றைய முஸ்லிம் சமூகத்தை பிடித்த முசீபத்துதான் எடுத்த உடனே ஹராம், ஹராம் என பத்வாக்கள் வழங்குவதாகும். மாற்று மதத்தவர்களின் இப்தாரில் கலந்து கொள்ள வேண்டாம் என குர் ஆன் ஹதீத் சொல்லியிருந்தால் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த நிலையில் எங்கும் எந்த இடத்திலும் இப்தார் செய்வது ஆகும் என்ற அடிப்படையை புரிந்து கொள்கிறோம்.
அதே வேளை இப்தார் என்பது ஒரு வணக்கம் என்பதால் அதனை மாற்று மதத்தவரின் இடத்தில் செய்வது கூடாது என்கிறார்கள். நபியவர்கள் ஒரு யூத பெண்மணியின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு சென்று விருந்து உண்டார்கள் என்ற நேரடி ஹதீதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள் விருந்து உண்பது ஆகும் என்றும் இப்தார் கூடாது என்றும் சொல்கிறார்கள்.
இஸ்லாத்தை பொறுத்த வரை வணக்க வழிபாடுகள் யாவும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளன. அதேவேளை வணக்கத்தை முஸ்லிம் அல்லாதவர்களின் இடத்தில் நிறைவேற்ற கூடாது என்ற தடை வரவில்லை. முஸ்லிம் அல்லாதாரின் வணக்கஸ்தலங்களில் நேர்ச்சை போன்றவற்றை நிறைவேற்ற கூடாது என ஹதீதில் வந்திருந்தாலும் சில வணக்கங்களை முஸ்லிம் அல்லாதாரின் இடத்தில் நிறை வேற்றலாம் என்பதை நபிகளார் வாழ்வில் நாம் காண்கிறோம்.
மக்கா கைப்பற்றப்படு முன் அது காபிர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அங்கு சிலைகள் கூட இருந்தன. ஆனாலும் நபியவர்கள் ஹரமில் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.
இந்தவகையில் சில வணக்கங்களை முஸ்லிம் அல்லாதார் இடத்தில் நிறைவேற்றலாம் என்று காண்கிறோம்.
மாற்று மதத்தவர் இடத்தில் வணக்கத்தை நிறைவேற்றக்கூடாது என பொதுவான தடை இருந்திருக்குமாயின் முஸ்லிம் சமூகம் பாரிய பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
உதாரணமாக நாம் தூர பயணம் போனால் முஸ்லிம் அல்லாதோரின் ஹோட்டல்களில்தான் தங்க வேண்டி வருகிறது. அங்கு அறையில் நாம் தொழ முடியாது என இத்தகையவர்கள் சொல்ல வருகிறார்களா? அதே போல் ஹஜ்ஜுக்கு நாம் செல்லும் போது முஸ்லிம் அல்லாதோரின் விமானத்தில் செல்கிறோம். ஹஜ்ஜுக்கு நிய்யத் வைப்பது கட்டாய வணக்கமாகும். அதனை மாற்று மதத்தவரின் விமானத்தில் வைத்து அந்த வணக்கத்தை செய்யலாமா? அதே போல் விமானத்தில் அல்லது கப்பலில், புகையிரதத்தில் தொழுகிறோம். அவை மாற்றாருக்கு சொந்தமாக இருந்தால் அதில் தொழ முடியாது என்று சொல்வது எத்தகைய முட்டாள்தனம்?
அதே போல் நாம் பிரயாணம் சென்றால் வழியில் நோன்பு துறக்க வேண்டி ஏற்பட்டால் முஸ்லிம் கடை கிடைக்காவிட்டால் மாற்று மதத்தவரின் கடைக்கு சென்று தண்ணீராவது அருந்தி நோன்பு துறத்தல் என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதும் கூடாது என சொல்ல வேண்டி வரும்.
மாற்று மதத்தவரின் அழைப்பை ஏற்று அவரது இடத்தில் இப்தார் செய்ய கூடாது ஆனால் நாமாக மாற்றார் ஹோட்டலுக்கு சென்று அந்த வணக்கத்தை நிறைவேற்றலாம் என சொல்ல வருகிறார்களா?.
ஆகவே இஸ்லாம் பற்றிய தெளிவு இல்லாமல் அரை குறையாக சிலதை கற்றுக்கொண்டு பத்வா கொடுக்கும் படுவாக்கள் திருந்த வேண்டும் அல்லது சமூகம் அவர்களை எச்சரிக்க வேண்டும். இது போன்ற விடயங்களில் தனி நபர்கள் கூடி பத்வா கொடுப்பதை விடுத்து உலமாக்கள் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து தெளிவு கண்டபின் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதை உலமா கட்சி நீண்ட காலமாக சொல்லி வருகிறது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் சமூக வலையத்தளத்தில் எழுத தெரிந்தவர்கள் எல்லாம் முஃப்திகளாகி விட்ட மோசமான சூழலில் வாழும் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- மௌலவி முபாறக் அப்துல் மஜீத், கபூரி, நத்வி, மதனி.
உலமா கட்சித்தலைவர்.

Post a Comment