BREAKING NEWS

முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது”

முல்லைத்தீவு மாவட்டத்தில், காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மேலும், “இக்குடியேற்றங்களுக்கு, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் துணைபோகின்றனர்” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக, முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பில் குழப்பகரமாக பதற்ற நிலை காணப்படுகின்றது. “யுத்தத்துக்கு முன்னர், முல்லைத்தீவில் இருந்தவர்கள் மீண்டும் இங்கு வரும் போது வீட்டுக்கு உரிய காணி இல்லை என்ற ரீதியில், அவர்களுக்கான காணி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள், தங்களுடைய அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக, குளாமுறிப்பில் காடழிப்பு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கிருந்திருந்தார்.

“அரசியல் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் சிலர், கடந்த ஆட்சிக் காலத்தில் இழைத்த தவறை, இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இழைக்கின்றார்கள். இவர்களுடைய தவறான செயற்பாடுகளும் அந்த மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களமும் உடந்தையளிக்கின்றது.

“வேறு பிரதேசத்தில் சொந்தமாக காணி, வீடு உள்ளவர்களுக்க, அரசாங்கத்தினால் காணி வழங்க முடியுமா? இந்த கேள்வியை மாவட்டச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். அரச அதிபர் எந்த பதிலையும் எனக்கு வழங்கவில்லை. தற்போது முல்லைத்தீவில் குடியேற்றப்படவுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏற்கெனவே அரசாங்கத்தினால் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்” என்றார்.

“பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின் போது, ஏற்கெனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. “இங்கு அரசியல் ரீதியாக ஒரு பகுதி மக்களுக்கு ஒரு விதமாகவும் இன்னுமொரு பகுதி, மக்களுக்கு வேறோரு விதமாகவும் சட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் குழப்பங்களும் உருவாகின்றன.

“கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி பிரதேசத்தில் 1953ஆம் ஆண்டு 136 பேருக்கு 4 ஏக்கர் வீதம் மகாவலி திட்டத்தின் கீழ், காணி வழங்கப்பட்டது. அக்காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் அக்காணிகள் வழங்கப்படும் என்று அத்திட்டத்தின் பணிப்பாளரால் 2016ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டது.

“இருப்பினும் இன்று வரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டும் அக்கறையை மகாவலித் திட்டத்தில் காட்டுவதில்லை. முதலில் மாவட்ட செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar