புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வல்ல. எமது அடிப்படைக் கோட்பாடுகளுடன் இணக்கம் காண்பதற்கு மேலும் பல கட்டப்பேச்சுக்களை நடத்தவேண்டியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கையில் பௌத்த மத த்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து தனது மனக் கிலேசத்தினையே மஹிந்த வெளியிட்டாரே தவிர அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முழுமையான எதிர்ப்பினை அவர் காட்டவில்லையெனவும் குறிப்பிட்ட மாவை எம்.பி., சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ள தற்போதைய தருணத்தினை குழப்பாது சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அதுகுறித்து எழுந்த விமர்சனங்கள், வட க்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ் லிம் பிரதிநிதித்துவங்களின் கருத்துக்கள், இடைக்கால அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் நிலைப்பாடும் அவரது அணியினர் தென்னிலங்கையில் மேற்கொள்ளும் பிரசாரங்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்த போதே மாவை.சோ.சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழலில் தமிழ் மக்களின் நிலைமை மோசமாக இருந்தது. நீதிவிசாரணைகள் இன்றிய நிலையில் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்டவொரு சமூகமாக திட்டமிடப்பட்ட வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடித்தமையினால் எமது மக்கள் ஆட்சிமாற்றமொன்றினை எதிர்பார்த்திருந்தனர்.
அதேபோன்று தான் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டுமென்ற தோற்றப்பாடும் சர்வதேச நாடுக ளில் எழுந்திருந்தது. இவ்வாறான பின்னணியில் தான் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவித்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பொறுப்புக்கூறும் விடயத்திலும் உள்நாட்டிலும், ஐ.நா.விலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
அதனடிப்படையில் முதற்தடவையாக தமிழ் மக்களின் பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கச் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த முற்போக்கான நடவடிக்கைக்கு நாமும் முழுமையான பங்களிப்பினைச் செய்திருந்தோம். இவ்வாறான நிலைமையில் தான் தற்போது இடைக்கால அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் அனைத்து தரப்பினரினதும் முன்மொழிவுகளும், இணக்கப்பாடு எட்டிய விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இறுதியான அறிக்கை அல்ல.
ஆகவே அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட விடயங்களை அல்லது ஆலோசிக்கப்பட்ட விடயங்களை மையமாக வைத்து விமர்சனங்களை வெளியிடுவது தவறானதாகும். காரணம் புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப புள்ளியொன்றாகவே நாம் இதனை பார்க்கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளோம்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றையே எதிர்பார்த்து அந்த ஆணையை எமக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே எமது அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒப்பீட்டளவில் பார்க்கையில் இடைக்கால அறிக்கையில் மேலும் பல படிகள் முன்னேற்றம் அடையவேண்டியுள்ளது. அதிகாரப்பகிர்வு அதியுச்சமாக இடம்பெறவேண்டியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக நாம் சகல தரப்பினருடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவேண்டியுள்ளது.
மிக முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் சம்பந்தமாக நாம் சகோதர முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமான அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான தனியலகு ஒன்றை அமைக்கும் கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை. அதனை வழங்குவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
இது சம்பந்தமாக நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான குழுவினருடனும் ஏனைய சில தரப்புக்களுடனும் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். அந்தப்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறும். நிச்சயமாக இரு சமூகத்திற்குமுள்ள ஐயப்பாடுகள் களையப்பட்டு அவை ஆரோக்கியமானதொரு கட்டத்தினை அடையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இவ்வாறிருக்கையில் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளின், தனிப்பட்ட நபர்களின் பின்னிணைப்பு குறித்து முரண்பாடுகள் பல காணப்படுகின்றன. அவை குறித்து நாம் கலந்துரையாடல்களை தொடர்ந்தும் செய்யவுள்ளோம். ஏற்கனவே நாம் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றுடன் கலந்துரையாடல்களை தனித்தனியாக நடத்தியுள்ளோம். அதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடரவுள்ளோம்.
Post a Comment