BREAKING NEWS

தலைமைத்துவ வறுமை

தலைமைத்துவ வறுமை
=======================

தலைவர்கள் நித்திய ஜீவன்கள் அல்ல.மரணிக்கக் கூடியவர்கள்.

நல்ல தலைவனின் பண்புகளில் ஒன்று தனக்குப் பிறகு தலைமை தாங்கக்கூடிய ஒருவரை வளர்த்து விடுவது.தனக்கு திடீரென ஏதாவது நடந்தால் தனது பணியை அடுத்த நிமிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒருவரை வளர்த்துவிடுவது தலைவரின் தலையாய கடமை.

உலகில் உள்ள மிகச்சிறந்த தலைவர்கள் எல்லாம் இதனைச் செய்திருக்கிறார்கள்.நபிகளார் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுவை அடையாளப்படுத்தினார்.  நபி இல்லை என்றால் அடுத்து அபூபக்கர் என்று எல்லோருக்கும் தெரியும்.அபூபக்கர் உமர் ரழியல்லாஹ் அன்ஹுவை அடையாளப்படுத்தினார். உமர் 5 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யுமாறு கூறினார்.காரணம் தனது இறப்பால் தனது சமூகம் இறக்கக் கூடாது என்று நினைப்பதுதான் நல்ல தலைமையின் பண்பு.

காந்தி மரணிக்கு முன்பே நேரு அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். பெரியாருக்கு அடுத்தது அண்ணா என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.அதனால் தலைமைத்துவப் பிரச்சினை வரவில்லை.

எப்பொழுது ஒரு தலைவன் தனக்கு அடுத்த ஒருவரை அடையாளப்படுத்தி வளர்க்கத் தவறுகிறானோ அவனது அமைப்பு அவனுக்குப் பின்னர் உடைந்துவிடும்.

அண்ணா ஒருவரை அடையாளப்படுத்தவில்லை. கருணாநிதியும் எம்ஜிஆரும் பிரிந்தார்கள்.தி.மு.க-அ.தி.மு.க என்று உருவானது.

ஜெயலலிதா ஒருவரை அடையாளபபடுத்தவில்லை. ஓ.ப.செல்வம்-சசிகலா அணி என்று உடைந்தது.

அஷ்ரப் ஒருவரை அடையாளப்படுத்தவே இல்லை.முஸ்லிம் காங்கிறஸ் கீலங்கீலமாக உடைந்தது.

தந்தை செல்வா ஒருவரை தனக்குப் பின அடையாள்ப்படுத்தவில்லை.தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உடைந்தது.

இது வரலாறு சொல்லும் பாடங்கள்.

அஷ்ரப் தனக்குப் பின்னர் ஒருவரை அடையாளம் காட்டவில்லை.அதன் பாதிப்பைத் தான் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அஷ்ரபிற்குப் பிறகு ஒவ்வொருவரும் காங்கிறசின் தலைமைக்குப் போட்டி போட்டார்கள். அதாவுல்லாஹ் அணி -ஹக்கீம் அணி என்று காங்கிறஸ் அன்று பிரிந்தது.

எனது நப்ஸ் பதவி கேட்கிறது என்று ஹக்கீம் தலைவரானார்.அதாவுல்லாஹ் தேசிய காங்கிறஸை ஆரம்பித்தார்.பேரியல் நுஆவைக் கொண்டு போனார்.ரிஷாட் மக்கள் காங்கிறசை ஆரம்பித்தார்.

அன்றே அஷ்ரப் அவர்கள் ஒரு ஆளுமையான தலைவரை அடையாளப்படுத்தியிருப்பாராக இருந்தால் இத்தனை அரசியல் படுகுழிக்குள் இலங்கை முஸ்லிம்கள் விழுந்திருக்கமாட்டார்கள்.
எந்தவிதத் தலைமைத்துவத் தகுதியுமில்லாத ஹக்கீம் தலைவராக வந்திருக்கவும் மாட்டார்.

முஸ்லிம்களின் தலைமைகள் மிகவும் பலவீனமானது என்பது முந்தையை, இன்றைய அரசாங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். முஸ்லிம்களுக்கு ஒரு ஆபத்தான முன்னெடுப்பொன்றை எடுக்கும்போது முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று பயந்து கொண்டு முன்னெடுப்புகளைக் கைவிட்ட காலம் போய் இவரை நாம் காசு கொடுத்துச் சமாளித்துக் கொள்ளலாம்.விரும்பியதைச் செய்வோம் என்ற நிலைக்கு பெரும்பான்மை அரசாங்கங்களின் மன நிலையை மாற்றியது எமது அரசியல்வாதிகள்தான்.

எதிர்காலங்கள் எமக்கு இதைவிட கடுமையாகவும், கொடுமையாகவும் இருக்கும்.தலைமைத்துவ வறுமை எம்மை வாட்டி எடுக்கிறது.

ஒரு மாற்றரசியலை நோக்கியும்,உடனடியாக எமது சமுகத்திற்கான தலைமையை உருவாக்குவதும்தான் நாம் இன்று செய்யவேண்டிய கடமை. இல்லாவிட்டால் இப்பொழுது இருப்பதைவிட கேவலமானவர்கள் அதிகாரத்தில் வருவார்கள்.இறுதியில் அழியப்போவது அப்பாவி முஸ்லிம் மக்கள்தான்.
Raazi Mohamed

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar