( மினுவாங்கொடை நிருபர் )
கொழும்பு - மன்ஸில் மன்றத்தின் இலவச வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ், இன மத மொழி பேதங்களின்றி வறுமைக்கோட்டில் தொழிலற்று வாழும் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு, அவர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் கேஸ் அடுப்புக்கள் வழங்கல், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் கல்வி பயிலும் இரண்டாயிரம் பாடசாலைச் சிறார்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல், பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு, கொழும்பு - மாளிகாவத்தை, கெத்தாராம விளையாட்டரங்கிற்கு முன்னால் அமைந்துள்ள மன்ஸில் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மன்ஸில் மன்றத்தின் 13 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் மக்கள் தொடர்பு அதிகாரியும், ஸ்ரீல.சு.க. யின் கொழும்பு மேற்கு பிரதான அமைப்பாளருமாகிய எம்.எச். மன்ஸிலின் பிறந்த நாளை முன்னிட்டும் இடம்பெறவுள்ள இச்சிறப்பு நிகழ்வுகள், அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் நடத்தப்படவுள்ளன.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக, ஸ்ரீல.சு.க. யின் மத்திய கொழும்பு இளைஞர் அணிக் குழுத் தலைவர் சப்னி மன்ஸில் தெரிவித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment