BREAKING NEWS

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துகொண்டு அரசியல் செய்யமாட்டேன்

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துகொண்டு அரசியல் செய்யமாட்டேன்


- அமைச்சர் பைஸர் முஸ்தபா சூளுரை



முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துகொண்டு, அரசியலில் ஈடுபட தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அவ்வாறு செயற்படும் அரசியலிலிருந்து தான் ஒதுங்கிக்கொள்வதாகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மூதூரில் சூளுரைத்தார்.

   மூதூர் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இம்முறை போட்டியிடுகின்ற  வேட்பாளர்களான எஸ்.ஏ. மக்பூல், எப்.எம். ஷரீக் ஆகியோரை ஆதரித்து, மூதூரில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

   பொதுவாக, சிங்கள மொழியில் மாத்திரம் உரையாற்றும் அமைச்சர், இப்பிரதேசங்களில் தமிழ் மொழியில் பேசியமை, எல்லோரினதும் கவனத்தையும் ஈர்த்தது.

   முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் உள்ளிட்ட வேட்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில், அமைச்சர் தொடர்ந்தும் பேசும்போது கூறியதாவது,

   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்யவில்லை. அவர் சிறந்த தூர நோக்குடன் செயற்படுகிறார். மஹிந்த ராஜபக்ஷ்விடம் பொது பல சேனாவின் அட்டகாசங்கள் பற்றி எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு தேவையான  நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவேதான், மஹிந்த அரசிலிருந்து வெளியேறி, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டேன்.

   உண்மையில், ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய நினைக்கமாட்டார். அவர் சமூக நோக்காகக் கொண்டு எப்போதும் செயற்படுபவர். எனவேதான், எவ்வித சலனங்களுமின்றி அரசாங்கத்தில் இருக்கிறேன்.

 முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வது தனது நோக்கமல்ல. அவ்வாறு துரோகம் செய்துகொண்டு, அரசியலில் ஈடுபடுவது தனது நோக்கமுமல்ல.

எனவேதான், முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் நினைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலிருந்தும், எச்சந்தர்ப்பத்திலும் எவ்விதத் தயக்கமுமின்றி, தான் வெளியேறத் தயாராக இருக்கின்றேன். ஆனால், மைத்திரிபால ஜனாதிபதியின் அரசாங்கம் அவ்வாறான தவறுகளையோ, துரோகங்களையோ முஸ்லிம்களுக்குச் செய்யவில்லை.

   ஆகவே, முஸ்லிம்கள் எவ்விதத் தயக்கமும்  காட்டாமல், ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், அதன்கீழ் போட்டியிடும் அபேட்சகர்களையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.  இதன்மூலம், முஸ்லிம்கள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும்.  அத்துடன், எமது பிரதேசத்துக்குத் தேவையான மேலும் பல அபிவிருத்திப் பணிகளை இந்த அரசாங்கத்தின் ஊடாகச்  செய்துகொள்ள முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar