BREAKING NEWS

மாயக்கல்லிமலைவிவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன? இறக்காமத்தில் அமைச்சர் ரிஷாட் கேள்வி...


-எஸ்.எல்.எம்.பிக்கீர்-
முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்குகாலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்பதியுதீன் ஆக்ரோஷமாக கேள்வியெழுப்பினார்.
இறக்காமம் பிரதேசசபைத்தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, இறக்காமம் சந்தைச் சதுக்கத்தில் நேற்று மாலை(20)நடைபெற்றமாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன்அலி, மக்கள் காங்கிரஸின் பாராளுமன்றஉறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், அமீர் அலி, இஷாக் ரஹ்மான் ஆகியோர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஜெமீல், ஸிராஸ் மீராசாஹிப், ஜவாத், முபாரக் அப்துல் மஜீத், முபாரக் அப்துல் ரஷாதிஆகியோர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப்பின்னர், தலைமைப் பொறுப்பேற்று சுமார்17வருடங்களாகியும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்டஅட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், கைகட்டிபேசாமடந்தையாக சமூகத்தைப்பற்றி சிந்திக்காத தலைமையாகவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இன்னும் இருக்கின்றது. முஸ்லிம்களின் வாக்குகளை ஏலமிட்டு வக்கில்லாத அரசியலை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கெனதோற்றுவிக்கப்பட்ட சமூகக் கட்சி, இன்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ளது. இது நமக்குத்தேவைதானா? இதுதான் இந்நாட்டு முஸ்லிம்களின் விதியா?
மாயக்கல்லி மலைசிலையை இலகுவாக அகற்றிக்கொள்ளவே, யானை சின்னத்தில் தமது கட்சி போட்டியிடுவதாகத் தெரிவிக்கும் ஹக்கீமின் கபட நாடகத்துக்கு நாம் துணைபோகலாமா?
கடந்தகால தேர்தல்களின் போது, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய இவர்கள், இற்றைவரை எதையுமே நிறைவேற்றவில்லை.
வாக்குறுதிகளை வழங்கிய பிறகுஅவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வந்து மக்களை உணர்வூட்டி,வாக்குகளைக் கொள்ளையடித்துச் செல்வதை இவர்கள் ஒரு கலாச்சாரமாக்கி விட்டனர்.
இதனைத் தட்டிக் கேட்பவர்களை தூக்கி வீசுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும்உழைத்த பலர் இன்று எம்முடன் இணைந்து, சமூகப் போராட்டத்தில் பயணிக்க முன்வந்துள்ளார்கள்.
மாயக்கல்லி மலை அடிவாரத்தில்முஸ்லிம்களுக்கும், பௌத்த தேரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் நாம் அச்சமடைந்தோம். ஜனாதிபதியுடனும், பிரதமருடனும், பாதுகாப்புத்தரப்பினருடனும்தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சுமுகமாக்கினோம்.
ஆனால், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்பி நீங்கள் ஆண்டாண்டுகாலமாக வாக்களிக்கும் தலைவர், உறுதிமொழிகளை மட்டுமே தந்தாரே ஒழிய,இன்னும் எந்தவொருநடவடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் மானத்தோடும், கௌரவமாகவும்,தலைநிமிர்ந்து வாழவும், எமக்கெதிரான அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும் எமது கட்சியை ஆதரிக்குமாறும்,எமது பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும் நான் உருக்கமாக வேண்டுகின்றேன் என்றார்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar