அமைச்சர் ரிஷாட்
பதியுதீனின் தொடர்ச்சியான முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்கு,
அவரது பகீரத முயற்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள
நிதியினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பாராளுமன்ற
உறுப்பினர் மஸ்தான்,தனது அமைச்சுக்கு பெற்றுக்கொள்ள மேற்கொண்டுவரும் முயற்சிகள் நீதமானதல்ல என்ற
காரணத்தின் அடிப்படையில், பிரதியமைச்சருடன் ஏற்பட்ட
முரண்பாடுகளால், அவரை விட்டு வெளியேற தான் நேர்ந்தது
என்று மௌலவி முனாஜித் (சீலானி) தெரிவித்தார்.
பிரதியமைச்சர்
மஸ்தானின் ஆலோசகராகவும், அவரது அரசியல் பயணத்தில் தோள்
கொடுத்தவருமான மௌலவி முனாஜித், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவருடன் இணைந்த பின்னர் கருத்து
தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
முஸ்லிம் காங்கிரஸின்
ஆரம்பகால போராளியாகவும், அக்கட்சியின் உச்சமட்ட உறுப்பினராகவும்
இருந்த நான்,வன்னி அரசியல் தொடர்பில் அமைச்சர்
ஹக்கீமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக தேசிய அரசியலிலிருந்து சிறிது
காலம் ஒதுங்கியிருந்தேன்.
கடந்த பொதுத்
தேர்தலின் போது, வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்
ஒருவராக வவுனியா மண்ணைச் சேர்ந்த ஒருவர் வரவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதனால்,
காதர் ஹாஜியாரின் பிள்ளைகளில் ஒருவரான மஸ்தானை
வன்னிப் பிரதேசத்தில் கஷ்டமான கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலுக்கு நிறுத்தி, வெற்றிபெற செய்தோம். இறைவனுக்கு அடுத்தபடியாக மஸ்தானின்
உருவாக்கத்தில் எனக்கு முதற்தர
பங்களிப்புண்டு. மூன்றரை வருட காலத்திற்குள் அவருக்கு பிரதியமைச்சராகும் வாய்ப்பை
இறைவன் நாடினான். இற்றைவரை அவரது அரசியல் நடவடிக்கைகளில் நான் உந்துசக்தியாகவும்,
ஆலோசனை வழங்குபவராகவும் பணியாற்றி வந்தேன்.
எனினும்,
அண்மையில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு கவலை
தருகின்றது. வன்னி அரசியலில் பிரிக்கமுடியாத சக்தியாகவும்,மக்கள் சேவகனாகவும்
விளங்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில், பிரதி அமைச்சர் மஸ்தான் நடந்துகொள்ளும் விதம் சமூகத்திற்கு
ஆரோக்கியமானதல்ல என்பதை உணர்ந்தேன்.
காலாகாலமாக வன்னி மக்களுக்கு அபரிமிதமாக பணியாற்றிவரும் அமைச்சர் ரிஷாட்
பதியுதீனின் அபிவிருத்தி தொடர்பில்,
மீடியாக்களில் தவறான முறையில் பூதாகரப்படுத்தி
செய்திகளை வெளியிடுவதும், விமர்சிப்பதும் அவருக்கு நல்லதல்ல
என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். அவரை
சுற்றியுள்ள விசக்கிருமிகள் பிரதியமைச்சரை பிழையாக வழிநடத்துகின்றனர் என்பதை
அவருக்கு நாம் எடுத்துக்கூறியும், எதுவித பலனும் கிடைக்காததால், அவருடன் தொடர்ந்தும் பயணிக்கமுடியாத நிலையில வெளியேறினோம். எனினும்,
சமூகத்திற்கான அரசியல் பயணத்தை அமைச்சர் ரிஷாட்
பதியுதீனுடன் இணைந்து மேற்கொள்ள முடிவுசெய்தோம்.
என்னுடன்
இந்த பயணத்தில் இணைந்து செயற்பட வவுனியா
பாவற்குளத்தைச் சேர்ந்த மௌலவி இர்ஷாத்தும் தயாராகினார்.
மீள்குடியேற்ற
செயலணி தொடர்பில் பிரதியமைச்சரின் நடவடிக்கைகள் தார்மீகமானதல்ல என்பதே எமது
கருத்து. அண்மையில்தான் பிரதியமைச்சராக
பதவியேற்ற அவர், இந்த செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை
தமக்கு தருமாறு மேலிடத்தை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துவருவது எமக்கு
விளங்கவில்லை. எந்தவகையில் நியாயமானது என்பதும் எனக்கு தெரியவில்லை. அத்துடன்
அவரது இந்த குறுகிய சிந்தனையுள்ள செயற்பாடு சமூகத்திற்கு ஏற்புடையதல்ல என்றும்
முனாஜித் மௌலவி தெரிவித்தார்.

Post a Comment