Arafath ALM
Monday, July 23, 2018
இன்று -23- பகல் கொழும்பில் மேற் குறிப்பிட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என கூறிக்கொள்ளும் சுமார் ஒரு டசினுக்குற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.
அங்கு பத்திரிகையாளர்களும் சமூகமளித்திருந்தனர். அக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை குற்றம் சுமத்தி பலர் கருத்து வெளியிட்டனர். தாம் பெண்கள் விவகாரமாக நீண்ட காலம் சம்பந்தப்பட்டிருந்ததாக கருத்து வெளியிட்ட அவர்கள் தமக்கு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சம்பந்தமாக உலமாக்களை அடக்கிய குழு சமர்பித்த அறிக்கையில் திருப்தி காணாமையினால் உலமா சபையை மிகவும் மோசமாக விமர்சித்தனர்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதை புரியாத அவர்கள் மற்ற சமூகத்தவர்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கான வயதெல்லை பதினெட்டாக அமைய வேண்டும் என்று கூறியதோடு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்லாத்தில் மாத்திரமே பருவமடைந்த பெண் பிள்ளைக்கு திருமணம் பேசலாம் என்ற அணுமதியுள்ளது. இந்த ஒழுங்கு இல்லாதததனால் பருவமடைய முன்பே காதலில் ஈடுபடும் சிறுவர்கள் பிள்ளை பெற்றெடுத்தவர்கள் என்று காணப்படுவதை இந்த அமைப்புக்கள் மறுக்க முடியுமா!
பெண் மக்களின் ஒழுக்கத்தைப் பற்றி பேச வேண்டிய இவ்வமைப்புக்கள் அதைப் பற்றி எக் கரிசணையும் கொள்ளாது, எமக்கென்று உள்ள திருமண ஒழுங்கு முறைகளில் கையை விட்டு இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. உரிய போது மணம் புரிந்து வைக்காத எத்தனை கன்னியர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்பதை இவர்கள் இன்னும் புரியவில்லையா!
உலமா சபையின் அறிக்கையை முழுப் பூசனிக்காயையும் சோற்றில் புதைத்தது போன்று பேசுவது பாவம் என்று இவர்களுக்கு தெரியாதா? உலமா சபையின் அறிக்கையில் பெண்களின் திருமண வயதெல்லையை பதினாரு என்றும் ஆண்களின் வயதெல்லையை பதிணெட்டு என்றும் சிபாரிசு செய்திருப்பதை ஏன் பொய்ப்படுத்த வேண்டும்.
அவ்வாறே பெண்கள் காழியாக வரவேண்டும் என்று ஆசைப்படும் அவர்கள் ஷரீஅத்தை மாற்ற வேண்டும் என விரும்புகிறார்களா? குத்பாக்கள் தொழுகைகள் போன்றவற்றை ஆண்களே செய்ய வேண்டும் என்பது ஷரீஅத் விதியாகும். இதனை மீறி அழகிய குரல் வளம் உள்ளவர், திடகாத்திரமானவர் என்பதற்காக அந்த வேலைகளைச் செய்ய இவ்வமைப்புக்கள் துணிகரம் கொள்ளுமா? இவர்களுக்கு ஆலோசனை விடுப்போரும் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா?
காழி என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஷரீஅத்தோடு சம்பந்தப்பட்டதாகும். வலியில்லாதவருக்கு வலியாக நின்று திருமணம் நடாத்தும் உரிமையை ஷரீஅத் வழங்கியுள்ளது. இந் நிலையில் பெண்கள் காழியாக வரவேண்டும் என அடம் பிடிப்போர் ஷரீஅத் சட்டத்தை மீற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்களா? திருமணப் பதிவை கட்டாயமாக்கப்படல் வேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கூறும் முன்பே எமது மூதாதையர்கள் அதற்கான ஒழுங்கை வகுத்துத்தந்துள்ளனர்.
இது இப்படி இருக்கையில் இவர்கள் புதிய ஒரு கண்டு பிடிப்புப் போல் பேசியிருப்பது ஆச்சரியமல்லவா!!
பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக கூறிக் கொள்ளும் இவ்வமைப்புக்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
ஷரீஅத்தோடு விளையாடாமல் தம்மை திருத்திக் கொண்டு சன்மார்க்கம் கூறும் ஒழுக்கங்களை பேணும் மாதர்களாக வாழ அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரர்திக்கின்றேன். (ஜ/மு)

Post a Comment